பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக்.. மாமனார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி சொன்னது என்ன தெரியுமா?
"ரிஷி சுனக்கால் நாங்கள் பெருமை கொள்கிறோம், அவர் வெற்றிகள் தொடர வாழ்த்துகிறோம். இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னால் முடிந்த விஷயங்களைக் கண்டிப்பாகச் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்"

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு அவரது மாமனாரும், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லிஸ் ட்ரஸ் ராஜினாமா
Just In




42 வயதாகும், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் கடந்த 1980 ஆம் ஆண்டு மே 12ல் பிரிட்டன் சவுதாம்ப்டன் நகரில் பிறந்தார். இவரது தந்தை யாஷ்வீரின் தந்தை வழி தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் 1960ல் கென்யாவுக்கு குடிபெயர்ந்தனர். இந்த குடும்பத்தில் இருந்து வந்த அவர் தற்போது பிரதமர் ஆகி உள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே பிரிட்டன் அரசியலில் குழப்பமான சூழல் ஏற்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கை மீறி பார்ட்டி நடத்தியது தொடங்கி ஊழல் புகார் வரை பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனை சுழன்று அடித்தது.
பிரச்சனைகளை தொடர்ந்து அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் ராஜினாமா செய்ய துவங்க, அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் சேர்ந்த ரிஷி சுனக் உள்ளிட்டவர்கள் கூட ராஜினாமா செய்தனர். வேறு வழியின்றி போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய பிரதமருக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற, இறுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் வென்று பிரதமரானார்.
பிரதமரான ரிஷி சுனக்
அவரது புதிய அமைச்சரவை தாக்கல் செய்த பட்ஜெட் காரணமாக பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இதையடுத்து லிஸ் ட்ரஸ் பதவியேற்ற 45 நாட்களில் ராஜினாமா செய்த நிலையில், வரும் 28 ம் தேதிக்குள் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், மற்றும் பென்னி மோர்டான்ட் ஆகியோர் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில், போரிஸ் ஜான்சன், பென்னி மோர்டான்ட் ஆகியோர் விலகினர். தனித்து களமிறங்கிய பிரிட்டன் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்வாவது உறுதியான நிலையில், ரிஷி பதவியேற்றுள்ளார்
நாராயண மூர்த்தி வாழ்த்து
இந்த நிலையில் ரிஷி சுனக்கின் மாமனாரான இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இன்ஃபோசிஸ் துணை நிறுவனரான நாராயணமூர்த்தி தனது மருமகனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "வாழ்த்துக்கள் ரிஷி. ரிஷி சுனக்கால் நாங்கள் பெருமை கொள்கிறோம், அவர் வெற்றிகள் தொடர வாழ்த்துகிறோம். இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னால் முடிந்த விஷயங்களைக் கண்டிப்பாகச் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்", என மருமகன் ரிஷி சுனக்கிற்கு இன்போசிஸ் நாராயணமூர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
ரிஷி சுனக்கிற்கு நாராயண மூர்த்தி செய்த உதவி
ரிஷி சுனக் நிதி அமைச்சராக இருந்தபோது, அவருக்கும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்திக்கும் (இன்போசிஸ் நாராயணமூர்த்தி-யின் ஓரே மகள்) நாட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. போரிஸ் ஜான்சன் ஆட்சி தடுமாறி வந்த நிலையில் ரஷ்ய - உக்ரைன் போர் பெரிதாக வெடிக்க, இதில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உடன் பிரிட்டன் சேர்ந்து பொருளாதார வர்த்தகத் தடைகளை விதித்தது. இந்த நிலையில் எதிர்கட்சியினர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் ரஷ்யாவில் இன்போசிஸ் செய்யும் வர்த்தகம் மூலம் பெரிய அளவில் பலன் அடைந்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். மேலும் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி, தனது பெரும் வருமானத்திற்குப் பிரிட்டன் நாட்டில் வரி செலுத்தாமல் ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருவருக்கும் உதவ இன்போசிஸ் நிர்வாகம் தனது ரஷ்ய வர்த்தகத்தை முழுமையாக மூடி, நாட்டை விட்டு வெளியேறியது. அப்படி தனது வர்த்தகத்தை விட்டுக்கொடுத்து அவர்களை பெரிய பிரச்சனையையில் இருந்து காத்தவர் நாராயணமூர்த்தி.