மைக்ரோசாப்ட் நிறுவனம்:


அதிகரித்து வரும் நெருக்கடி சூழல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள, பல்வேறு பெருநிறுவனங்களும் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைந்து வருகின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ளது சாப்ட்வேர் உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம். கடந்த ஜுன் மாத விவரங்களின்படி, வாஷிங்டனை மையாமாக கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தில், உலகம் முழுவதும் 2 லட்சத்து 21 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், 1 லட்சத்து 22 ஆயிரம் அமெரிக்காவிலும், 99 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் உள்ள அதன் கிளை நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். 


11,000 பேர் பணிநீக்கம்?


இந்நிலையில், கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களின் வரவு-செலவு தொடர்பான விவரங்களை இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ள சூழலில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை


காரணம் என்ன?


தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம்  சரிவில் உள்ளதன் காரணமாக, அதன் விண்டோஸ் மற்றும் மற்ற உபகரணங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால், சந்தையில் தனது கிளை க்ளவுட் நிறுவனமான அசூர்-ன் வளர்ச்சியை நிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளது.  இதன் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவினங்களை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. உற்பத்திக்கான தேவை சரிவு மற்றும் உலக அளவில் நீடிக்கும் பொருளாதார மந்தநிலையும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த பணி நீக்கத்தின் தாக்கத்தால், தொழில்நுட்ப துறையை சேர்ந்த மேலும் பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


முன்னணி நிறுவனங்கள் அதிரடி:


உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன. அமேசான் நிறுவனம் உலகம் முழுவதிலும் தனது நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 20 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியது. அதைதொடர்ந்து, சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை வெளியேற்றியது. அதேபோன்று, ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இவர்களில் பல பேர் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.