மழை பெய்யும் எனும் நம்பிக்கையில் முதலையை மணந்த மெக்சிகோ மேயர். மணமேடையில் முதலைக்கு முத்தமிட்டும் முதலையோடு நடனமாடியும் லவ்வைப் பொழிந்தார். இந்த ருசிகர திருமணம் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. 


இயற்கையின் அற்புதங்களில் ஒன்று மழை. நீரின்றி அமையாது உலகு என்பதை நம்மில் மறுப்பவர்கள் யாரேனும் இருக்க முடியுமா என்றால் இல்லை தான். இப்படி வாழ்வின் அடிப்படையாக உள்ள நீரின் மூலதன ஆதாரமே மழை தான், அந்த மழைக்கு வேண்டி நம் ஊர்களில் மாரியம்மனை வழி படுவதை பார்க்கிறோம். சில நேரங்களில் விலங்குகளுக்கு திருமணம் செய்து  வைத்து மழைக்காக வேண்டுவதையும் பார்க்கிறோம். இப்படியான சுவாரஸ்யமான நிகழ்வுகள் மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டு, மழைக்கு வேண்டி பல்வேறு வகையான சுவாரஸ்யமான சடங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகைச் சடங்குகள் அந்தந்த நிலப்பரப்பிற்கு ஏற்ற வகையில் மாற்றம் பெருகிறதே தவிர, அந்த சடங்குகளுக்கான ஒரே நோக்கம் ”மழை! மழை!! மழை!!!” 


மழை வேண்டி..


மழை வேண்டி மெக்சிகோவில் உள்ள சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகரத்தின் மேயராக இருப்பவர் ஹொமேலூலா விக்டர். இவர் அங்குள்ள ஒரு தேவாலயத்தில், ஆண்டாண்டு காலமாக அங்கு நடைபெற்று வரும் சடங்கின் படி,  முதலையினை திருமணம் செய்துள்ளார். இப்படி திருமணம் செய்தால், நல்ல மழைப் பொழிவும், மீனவர்கள், மீன் பிடிக்கச் செல்லும் போது அதிகப்படியான மீன்களும், இறால்களும் கிடைக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறது. மேலும் இந்தச் சடங்கினை பல ஆண்டுகளாக அங்குள்ள மேயர்களே செய்து வருகின்றனர்.


முறையான திருமணம்


அதன்படி, சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகரத்தின் மேயர் ஹொமேலூலா விக்டர், முதலையினை கிருத்துவ முறைப்படி கடந்த வாரம்  திருமணம் செய்துள்ளார். இந்த சடங்குத் திருமணத்தின் மோது முதலைக்கு, கிருத்துவ முறைப்படி வெள்ளை நிற திருமண உடை அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலையினால் எந்த அசம்பாவிதமும், நடக்காமல் இருக்க எச்சரிக்கையாக முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது.  திருமணம் முடிந்ததும் முதலைக்கு மேயர் முத்தமிட்டும், முதலையுடன் நடனமாடியும் உள்ளார்.  முதலையினை இந்தச் சடங்குத் திருமணத்தில்  ஏராளமான பொது மக்களும், மேயரின் மனைவி மற்றும்குழந்தையும் கலந்து கொண்டனர். 


இந்தச் சடங்குத் திருமணம் குறித்து மேயர் கூறும்போது, “ இயற்கையிடம் மழை, உணவு, மீன் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை” எனவும், . இந்தச் சடங்குத் திருமணத்தை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர் எலியா எடித் அகுய்லர் கூறுகையில், “இந்த சடங்கு நிறைய மகிழ்ச்சியை தருகிறது. எனது பழங்குடி இனத்தைக் கண்டு நான் பெருமை கொள்கிறேன். இது ஒரு அழகான சடங்கு” எனவும் கூறியுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண