இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவைப் பேணி வந்த மாலத்தீவு அதிபர் முகமது சோலி, சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். கடும் போட்டிக்கு மத்தியில் எதிர்க்கட்சி வேட்பாளரான முகமது முய்சு வெற்றி பெற்றார். 


மாலத்தீவு அதிபர் தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை தலைமை தாங்கி நடத்தியவர் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவரது பிரச்சாரமே, 'இந்தியாவே வெளியேறு' என்ற முழக்கத்தை மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்டது. 


இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவேன் என முகமது முய்சு வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, இந்தியப் படைகளை வெளியேற்றுவேன் என அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்தே முகமது முய்சு வலியுறுத்தி வந்தார்.


மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற முகமது முய்சு மீண்டும் அதிரடி:


இந்த நிலையில், ப்ளூம்பெர்க் டிவிக்கு அவர் அளித்த நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது, "முழு சுதந்திர நாடாக இருக்கவே மாலத்தீவு விரும்புகிறது. மாலத்தீவில் உள்ள இந்திய துருப்புக்களை வெளியேறச் சொல்வேன். இந்திய வெளிநாட்டு ராணுவம்தான் இங்கு உள்ளது. துருப்புக்கள், வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது எதிர்வினை ஒரே மாதிரியாகதான் இருக்கும்.


இந்திய அரசுடன் தனது இராணுவ இருப்பை அகற்றுவது குறித்து ஏற்கெனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளேன். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து வருகிறது. பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நாங்கள் விரும்புகிறோம். இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக மற்ற நாடுகளின் படைகள் இங்கு கொண்டு வரப்படாது. 


சீனா அல்லது வேறு எந்த நாடும் தங்கள் ராணுவ வீரர்களை இங்கு கொண்டு வர அனுமதிக்க மாட்டேன். அனைத்து நாடுகளுடனும் நாங்கள் உதவி, ஒத்துழைப்பை விரும்புகிறோம்" என்றார்.


இந்திய படைகள் வெளியேற்றப்படுமா?


மாலத்தீவில் எவ்வளவு இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.  மாலத்தீவில் இந்திய ராணுவத்தை குவிப்பது தொடர்பாக இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட்டது பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுத்தது. அதேபோல, அதன் நோக்கம் குறித்து தொடர் கேள்வி எழுப்பப்பட்டு வந்துள்ளது.


மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்களை இந்தியா நன்கொடையாக வழங்கியிருந்தது. இந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவ வீரர்கள்தான் இயக்கி வந்தனர். அதேபோல, இயற்கை பேரிடரின்போது கடலில் சிக்கிய மக்களைக் காப்பாற்ற இந்திய ராணுவ வீரர்கள் பெரும் பங்காற்றினர். 


மாலத்தீவு அதிபர் தேர்தலில் தற்போது வெற்றிபெற்றுள்ள எதிர்க்கட்சி கூட்டணியான மக்கள் தேசிய காங்கிரஸ் - மாலத்தீவு முற்போக்கு கட்சி, சீனாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தது. அப்துல்லா யாமீன் ஆட்சிக் காலத்தில், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மாலத்தீவு கடனாக பெற்றது. தேர்தலில் முய்சு வெற்றிபெற்றதால் சீனாவுக்கு மட்டும் இன்றி சீன முதலீட்டாளர்களுக்கும் இது மிகப் பெரிய வாய்ப்பை தரும் எனக் கூறப்படுகிறது.