Maha Shivaratri :  பாகிஸ்தானில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு 89 இந்திய பக்தர்கள் சென்று வழிபட்டுள்ளனர்


லாகூர் : பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பிரசித்த பெற்ற கடாஸ் ராஜ் கோயில் அமைந்துள்ளது. இங்கு வருடம்தோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பக்தர்கள் வருகை தருவது வழக்கமான ஒன்று. இங்கு ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்த தரிசனம்  மேற்கொள்கின்றனர். அதன்படி இந்த வருடம் மகா சிவராத்திரியைக் கொண்டாடுவதற்காக இந்தியாவில் இருந்து சுமார் 89 இந்து யாத்ரீகர்கள் நேற்று சென்றடைந்தனர்.


பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் புனித ஸ்தலங்களை கவனிக்கும் செய்தித் தொடர்பாளர் அமீர் ஹாஷ்மி கூறியதாவது, ”இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக சுமார் 89 இந்து யாத்ரீகர்கள் இங்கு வந்தனர். எவாக்யூ அறக்கட்டளை சொத்து வாரிய மூத்த அதிகாரிகள் ராணா ஷாஹித் மற்றும் ஃப்ராஸ் அப்பாஸ் அவர்களை எல்லையில் வரவேற்றனர்” என்றார்.


”பாகிஸ்தானுக்கு வருகை தந்த யாத்ரீகர்கள் லாகூரில் இருந்து 300  கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சக்வாலுக்கு செல்வதற்கு முன் ஒரு நாள் லாகூரில் தங்கியிருப்பார்கள் எனவும் வியாழக்கிழமை நடைபெறும் மகா சிவராத்ரி விழாவில் பங்கேற்பர்” என்று தெரிவித்தார். இதனையொட்டி அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  


பிரசித்த பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலில் பிரம்மாண்டமாக மகா சிவராத்ரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இந்திய யாத்ரீகர்கள் 89 பேர் பாகிஸ்தானில் உள்ள கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். புனிதத் தலங்களை தரிசிக்க அனுமதிக்கும் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசாக்களை பாகிஸ்தான் வழங்கி உள்ளது. வருகை தரும் 89 பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்று டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.


புனிதத் தலங்களை பாதுகாக்கவும் அவற்றை பார்வையிடச் செல்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் பாகிஸ்தான்  தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆப்தாப் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.