அமெரிக்க நீதித்துறை நேற்று வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்த சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் இடம் பெற்றுள்ளன. அதில், பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் மூலம் அவருக்கு பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், எப்ஸ்டீன் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Continues below advertisement

எப்ஸ்டீனின் மின்னஞ்சல் கூறுவது என்ன.?

நேற்று வெளியான கோப்புகளில், 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்குத் தானே அனுப்பிக்கொண்ட ஒரு இமெயிலில், பில் கேட்ஸ் குறித்த திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் தொடர்பு கொண்டதால் ஏற்பட்ட பால்வினை நோய்க்காக(STD) சிகிச்சை அளிக்க மருந்துகளை பெற எப்ஸ்டீன் உதவியதாகக் தெரிகிறது.

மேலும், அந்த மருந்துகளை தனது மனைவி மெலிண்டாவிற்கு தெரியாமல் அவருக்கு வழங்குவதற்கும் பில் கேட்ஸ் முயன்றதாகவும் எப்ஸ்டீன் அந்த மின்னஞ்சலில் எழுதியுள்ளார். மேலும், தங்களது 6 வருட நட்பை முடித்துக்கொள்வதற்காக பில் கேட்ஸை அவர் விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் 1994-ம் ஆண்டு திருமணம் செய்து 2021 வரை வாழ்ந்த பின் பிரிந்தனர். கேட்ஸின் விவகாரங்களும், எப்ஸ்டீன் உடனான அவரது தொடர்பும் தான், தங்கள் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்று என மெலிண்டா கேட்ஸ் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

பில் கேட்ஸ் தரப்பு மறுப்பு

இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் அபத்தமானவை என்றும், முற்றிலும் பொய்யானவை என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு பில் கேட்ஸுடன் இருந்த தொடர்பை அவர் துண்டித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், எப்ஸ்டீன் இத்தகைய அவதூறுகளை பரப்ப முயன்றதாகவும் பில் கேட்ஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

2019-ம் ஆண்டு நியூயார்க் சிறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக காத்திருந்தபோது தற்கொலை செய்து கொண்ட எப்ஸ்டீனுடனான தனது தொடர்புக்கு வருந்துவதாக, பில் கேட்ஸ் ஏற்கனவே கூறியுள்ளார். மேலும், அவர் நீண்ட காலமாக எந்தவொரு முறையற்ற நடத்தையையும் மறுத்து வருவதோடு, எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த வணிக உறவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்க நீதித்துறை கூறுவது என்ன.?

இந்த ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்க நீதித்துறை, இதில் உள்ள அனைத்து தகவல்களும் உண்மை என்று தாங்கள் உறுதிப்படுத்தவில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. மறுபுறம், எப்ஸ்டீன் தனது டைரி குறிப்புகள் மற்றும் மின்னஞ்சல்களில் பல மிகைப்படுத்தப்பட்ட அல்லது பொய்யான தகவல்களை எழுதியிருக்க வாய்ப்புள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.