தெற்கு லெபனான் பகுதிக்கு அருகில் செய்தி சேகரிக்க சென்ற போது தாக்குதலில் சிக்கி ராய்டர்ஸ் நிறுவன பத்திரிக்கையாளர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 பத்திரிக்கையாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 


இஸ்ரேல் - ஹமாஸ் போர்:


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த ஒரு வார காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான கட்டடங்கள், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,800 ஐ கடந்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், மறுமுனையில் லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பிலும், தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேலில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.  இதனால், இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 


இதற்கிடையில் இஸ்ரேலில் போர் நடைபெற்று வருகிறது சமரச பேச்சுவார்த்தைக்கு இங்கு இடமில்லை என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அமெரிக்க தனது ராணுவ படை வீரர்கள் மற்றும் ஆய்தங்களை அனுப்பி வைத்துள்ளது. இது போன்ற இக்கட்டான சூழலில் அமெரிக்க துணையாக நிற்கும் என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பத்திரிகையாளர்கள் மரணம்:


இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் தங்கள் பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு  காசாவில் இருக்கும் மக்கள் அனைவரும் தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், இதன் மூலம் தரை தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மக்கள் அங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் சிக்கித் தவிக்கும் நிலையில் மக்களை வெளியேறச் சொல்வது எப்படி ஏற்றுக்கொல்ள முடியும் என்றும் 11 லட்சம் மக்கள் வெளியேற்றுவது சாதாரண விஷயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. 






6 பத்திரிகையாளர்கள் காயம்:


இந்நிலையில் இன்று தெற்கு லெபனான் அருகே செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட போது இஸ்ரேலில் இருந்து வந்த குண்டு, அவர்கள் இருக்கும் இடத்தில் தாக்கியது. இந்த தாக்குதலில் ராய்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் உயிரிழந்தார். மேலும் 6 பத்திரிக்கையாளர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் இருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்திரிக்கையாளரின் மறைவுக்கு ராய்டர்ஸ் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “ பல பத்திரிக்கையாளர்கள் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் பணியின் போது உயிரிழந்துள்ளனர். அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.






மேலும், “போர்களுக்கும் விதிகள் உண்டு. சர்வதேச மனிதாபிமான சட்டம், மனித உரிமைகள் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் கேடயங்களாக பயன்படுத்தப்படக்கூடாது.காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.