ஜப்பானின் கிராமப்புறங்களில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தலைநகர் டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு 1 மில்லியன் யென் வழங்கப்பட உள்ளது.


இந்த புதிய திட்டத்தின்படி, இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோ பகுதியை விட்டு வெளியேறினால் 3 மில்லியன் யென் வழங்கப்படும்.


2019 இல் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டுக்குள் 10,000 பேர் டோக்கியோவிலிருந்து கிராமப்புறங்களுக்குச் செல்வார்கள் என ஜப்பான அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, 1,184 குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.


2020ஆம் ஆண்டு, 290 குடும்பங்களுக்கும் 2019ஆம் ஆண்டு, 71 குடும்பங்களுக்கும் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1 மில்லியன் யென் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக ஆதரவு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய டோக்கியோ பெருநகரப் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக வசித்த குடும்பங்கள் ஆதரவு தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், உள்ளூர் நகராட்சிகளும் இதற்கான நிதி செலவை பிரித்துக் கொள்கின்றன.


குடும்பங்கள் உள்ளூர் பகுதியில் தொழில் தொடங்க விரும்பினால் கூடுதல் உதவியும் வழங்கப்படும். இருப்பினும், கிராமப்புறத்திற்கு செல்வதற்கு 1 மில்லியன் யென் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆதரவு தொகை பெற விரும்பும் குடும்பங்கள் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தங்கள் புதிய வீடுகளில் வசித்திருக்க வேண்டும்.


குடும்பத்தில் ஒரு உறுப்பினர் வேலையில் இருக்க வேண்டும் அல்லது புதிய வணிகத்தைத் தொடங்க திட்டமிட்டிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவாக வசித்தவர்கள் உதவி தொகையை பெற்றால் அந்த பணத்தை திருப்பி தர வேண்டும்.


கிராமப்புறங்களில் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், மக்களுக்கு அங்கு வாழ்வதற்கான பலன்கள் குறித்து விவரிக்கப்படும். அதன் ஒரு பகுதியாக, ஒடாரி கிராமத்தில் குழந்தை வளர்ப்பு திட்டத்தை எளிதாக பெறுவது குறித்து அவர்களுக்கு விவரிக்கப்பட்டுள்ளது.


அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் நகரங்களுக்கு வேலைவாய்ப்பை தேடி செல்வதால், ஜப்பானின் கிராமப்புறங்கள் சமீப ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து வருகிறது. 


எனவே, உதவி தொகை வழங்கி பிற பகுதிகளில் மக்களை குடியேற்ற வைப்பது டோக்கியோவில் உள்ள பொது போக்குவரத்து மீதான அழுத்தத்தை குறைக்கும். மக்கள் வசிக்காத காலியாக உள்ள பகுதிகள் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.


ஜப்பானில் மக்கள் தொகையும் பிறப்பு வகிதமும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில், மொத்தம் 8,11,604 குழந்தைகள் பிறந்துள்ளது. 1899ஆம் ஆண்டு, மக்கள் தொகை பதிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பதிவான குறைந்த பிறப்பு விகிதம் இதுவாகும்.