பாலஸ்தீனின் காசாவில் "அஸோசியேடட் ப்ரஸ்", "அல்-ஜசீரா" போன்ற சர்வதேச ஊடக நிறுவனங்கள் இயங்கி வரும் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. 


உலகமே கொரோனா அச்சத்தில் துடித்துக்கொண்டிருக்க, இஸ்ரேல்-பாலஸ்தீனம் படைகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு படைகளுக்கும் இடையே வான் வழி தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான சண்டை நீண்டகாலமாக நடந்து வந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்கக் காரணம் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் ஒரு பழைமை வாய்ந்த மசூதி . 




இந்த மசூதி இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இதனால் இப்பகுதியை பாலஸ்தீனியர்கள் தங்களுடையது என்கின்றனர். அதற்கு இஸ்ரேலும் சொந்தம் கொண்டாடுகிறது. இந்தச் சூழலில் கடந்த வாரம் அல் அசா மசூதிக்கு அருகில் இருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படைகள் 5 நாட்களாக தாக்குதல் நடத்தியது. இதில் மசூதிக்கு உள்ளேயும் படைகள் வீசிய குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடியாக ஹமாஸ் படை காசா பகுதியிலிருந்து ஏவுகணையை ஏவியது. அதற்கு பதிலடியாக மீண்டும் இஸ்ரேல் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது.




இந்த பதிலுக்கு பதில் தாக்குதலால் தான் காசா பகுதி பற்றி எரிகிறது.  இதுவரை 119 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிலடியாக காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பறக்கவிடுகிறது ஹமாஸ் படை. ஆனால் இஸ்ரேல் கைவசம் இருக்கும் அயர்ன் டோம் அனைத்தையும் தடுத்து முறியடிக்கிறது. 


இப்படி தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில் தான், இன்று சர்வதேச ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இன்று காசாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தை குறி வைத்திருந்த இஸ்ரேல், அங்கு வசிக்கும் குடும்பங்களை வேறு இடத்திற்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது.






இந்த கட்டிடத்தில், அஸோசியேட்டட் ப்ரஸ், அல்ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களில் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. சர்வதேச ஊடகங்கள் இயங்கி வரும் இக்கட்டிடத்தை குறிவைத்து தாக்கப்போவதாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.






எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த காரணத்தால், சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்களில் பணியாற்றி வந்த பத்திரிக்கையாளர் வேறு இடத்திற்கு சென்றனர். எனினும், இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் படையினர் சர்வதேச ஊடகங்கள் இயங்கி வந்த கட்டிடத்தை தரைமட்டமாக்கியுள்ளனர்.