Israel War: இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், அங்கு சிக்கி தவித்த இந்தியர்கள் 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று மேகாலயா முதல்வர் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல்-பாலஸ்தீன போர்:


 இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 1948ஆம் ஆண்டு தனி நாடாக இஸ்ரேல் உருவானதில் இருந்தே இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரமே மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. கிழக்கு ஜெருசலேம், காசா, வெஸ்ட் பேங்க் ஆகிய பகுதிகளில் வாழும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேதான் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது.  இந்த ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் தான் நேற்று  போர் தொடங்கியது.


600 பேர் உயிரிழப்பு:


இதுவரை இல்லாத அளவுக்கு தெற்கு இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக ஹமாஸ் குழு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், கண்ணில் பட்ட பொதுமக்களை எல்லாம் சுட்டுக் கொலை செய்தது பதைபதைக்க வைத்து வருகிறது. இதற்கு பதிலடி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில்  இஸ்ரேலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்தியர்கள் பத்திரமாக மீட்பு:






இஸ்ரேலில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவளி யூதர்கள் உள்ளனர். இவர்களில்,  27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மேகாலயா முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "மேகாலயா மாநிலத்தைச் சேர்நத் 27 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், எகிப்து அருகே வந்து விட்டதாக" முதல்வர் கான்ராட் சங்கா தெரிவித்துள்ளார். மேலும், வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் மீட்கப்பட்டு இருப்பதாகவும் இன்று இரவு அல்லது நாளைக்குள் நாடு திரும்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும், மேகாலயா மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வான்வீரோய் கர்லூகியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் இஸ்ரேலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்மீக பயணமாக மேகாலயா எம்.பி மற்றும் அவரது குடும்பத்தினர் இஸ்ரேல் சென்றுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.