கால்பந்துப் போட்டியின்போது கலவரம் வெடித்த மைதானம் இடிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் முறையான வசதிகளுடன் மீண்டும் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தோனேசியாவில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கால்பந்து போட்டிக்கு நடுவே கலவரம் வெடித்ததில் 133 பேர் உயிரிழந்தனர். விளையாட்டு அரங்கில் நிகழ்ந்த மிக மோசமான கலவரமாக இது கருதப்படுகிறது. 


கிழக்கு ஜாவா,  மலாங்கில் உள்ள கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்த நிலையில்,  இந்தக் கால்பந்து மைதானம் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படும் என இன்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.


 






முன்னதாக ஜோகோ விடோடோவைச் சந்தித்த ஃபிஃபா அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் ”மலாங்கில் உள்ள கஞ்சுருஹான் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு ஃபிஃபா தரத்தின்படி, வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய முறையான வசதிகளுடன் மீண்டும் கட்ட உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.


அரேமா எஃப்சிக்கும் பெர்செபயா சுரபயாவுக்கும் இடையிலான கால்பந்து போட்டி கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்றது. அப்போது  பெர்செபயா சுரபயா அணியிடம் அரேமா எஃப்சி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அரேமா எஃப்சி ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டர்.


கலவரத்தைக் கட்டுபடுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் மைதானத்திற்குள் இருந்த போராட்டக்காரர்கள் நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் தாக்கிக்கொண்டதில் 127 பேர் பலியாகியுள்ளனர். கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த நிலையில் 2 போலீசார் உள்பட 93 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.


இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தோனேசியா கால்பந்து சங்கம் (PSSI)  இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. மேலும், போட்டிக்கு பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையைத் தொடங்க ஒரு குழு மலாங்குக்கு அனுப்பப்பட்டது.


 






இதுகுறித்து இந்தோனேசியா கால்பந்து சங்கம் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், "கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில் அரேமா அணியின் ரசிகர்களின் செயல்களுக்கு இந்தோனேசியா கால்பந்து சங்கம் வருந்துகிறது. இந்தச் சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இந்தோனேசியா கால்பந்து சங்கம் உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை உருவாக்கி உடனடியாக மலங்கிற்கு புறப்பட்டுச் சென்றது" என்று தெரிவிக்கப்பட்டது.