இங்கிலாந்தின் தென் கிழக்கு லண்டனில் உள்ள லேவிசம் பகுதியில் வசித்து வந்தவர் கபீர்கார்க். இவர் மனநல மருத்துவர்.  குழந்தைகளுக்கான ஆபாச இணையதளம் நடத்திய குற்றத்திற்காக இவரை கடந்தாண்டு அந்தநாட்டு போலீசார் கைது செய்தனர்.


குழந்தைகள் மீதான வன்முறை ஆபாச இணையதளம்:


இந்த நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணை அந்த நாட்டில் உள்ள ஊல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த வழக்கின் விசாரணை முடிந்து மருத்துவர் கபீர்கார்க்கிற்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளனர்.


சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கபீர்கார்க் பெங்களூரில் மருத்துவ படிப்பை முடித்த பிறகு மேல்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு படிப்பை முடித்த பிறகு அங்கேயே இருந்துள்ளார். அந்த நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச இணையதளங்கள் இயங்குவதை கண்டுபிடித்த அந்த நாட்டு போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


சிக்கியது எப்படி?


அப்போது, மருத்துவர் கபீர்கார்க் தன்னுடைய மடிக்கணினியில் குழந்தைகள் ஆபாச இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அந்த ஆபாச இணையதளத்தின் அட்மின்களில் ஒருவராக இருந்துள்ளார். அவரது மடிக்கணினியில் ஆபாச படங்கள், புகைப்படங்கள், மருத்துவ அறிக்கைகள் இருந்துள்ளன. அவரது மருத்துவ அறிக்கைகளில் ஒன்று இந்தியாவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை என்ற அறிக்கையும் இருந்துள்ளது.


இந்த குழந்தைகள் ஆபாச இணையதளத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இருந்து வந்ததும், அவர்களில் சிலர் அட்மின்களாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதேபோல, 34 வயதான மேத்யூ ஸ்மித் என்பவரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும், அவரிடம் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்களும், வீடியோக்களையும் கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


மாடரேட்டர்:


இவர்கள் நடத்திய குழந்தைகள் ஆபாச இணையதளத்தில் தொடக்கத்தில் உறுப்பினராக இருந்த மருத்துவர் கபீர்கார்க், மிகவும் தீவிரமாக இந்த இணையதளத்தில் இருந்ததை தொடர்ந்து அவரை இணையதளத்தின் மாடரேட்டராக மாற்றியுள்ளனர். கபீர்கார்க் தனது அறையில் மடிக்கணினியில் மாடரேட்டர் கணக்கின் மூலம் உள்ளே நுழைந்தபோது அவரை கையும், களவுமாக அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இணையதளத்தின் விதிகளை வகுப்பதும், உறுப்பினர்களை சேர்ப்பதும், நீக்குவதையும் தன் அதிகாரமாக அவர் கொண்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.


உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அரங்கேறி வருகிறது. இதைத்தடுக்க அந்த நாட்டு அரசாங்கங்களும், காவல்துறையினரும் தீவிரமாக செயல்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்களை சிலர் இழைத்து வருவது கவலையை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள் உள்பட யார் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டாலும் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவசியமானது ஆகும். 


மேலும் படிக்க: Minister Nirmala Sitharaman: அவர் ஆட்சியில் 6 இஸ்லாமிய நாடுகள் மீது குண்டு வீசப்பட்டன.. நிர்மலா சீதாராமன் ஒபாமாவுக்கு கண்டனம்..


மேலும் படிக்க: Saliva Pregnancy Test: எச்சில் மூலம் பெண்களுக்கு கர்ப்பத்தை சோதனை செய்யும் புதிய கருவி அறிமுகம்… எப்படி வேலை செய்யும்?