ஐக்கிய அரபு எமிரேட்டின் அஜ்மானில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது, தீயை அணைக்க அதிகாரிகள், தீயணைப்பு கட்டுப்பாட்டு வாகனங்களை அனுப்பத் வைத்தனர்.  அஜ்மான் போலீஸார் கூற்றுப்படி, இந்த சம்பவம் 'அஜ்மான் ஒன் காம்ப்ளக்ஸின்' டவர் 02 இல் நடந்துள்ளது.






தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் தலைமையிலான பாரிய நடவடிக்கைக்குப் பிறகு சிவில் பாதுகாப்பு மற்றும் காவல்துறை குழுக்கள் இணைந்து வெற்றிகரமாக தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய நிலவரப்படி, இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து நடந்த இடத்திற்கு ஒரு நடமாடும் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த காவல் நிலையம் மூலம், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களை குறித்து புகார் அளித்து, பதிவு செய்து கொள்ளலாம் என  அஜ்மான் காவல்துறை நடவடிக்கைகளின் பொது இயக்குநரான அப்துல்லா சைஃப் அல் மத்ரூஷி தெரிவித்துள்ளார்.


கடந்த சில ஆண்டுகளில் கட்டிடத் தீ கணிசமான அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகம் தரப்பில் அறிக்கை கொடுக்கப்பட்ட மூன்று நாட்களில் இந்த பெரும் தீ விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.  உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, சிவில் பாதுகாப்பு குழுக்கள் 2022 இல் இது போன்று 3,000 க்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்துள்ளது என்றும் இதில் 2,169 கட்டிட தீ விபத்துகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் 2090 ஆக இருந்த தீ சம்பவங்கள் கடந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் 2020ஆம் ஆண்டு 1,968 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 பெரும்பாலான தீ விபத்துகள் குடியிருப்புப் பகுதிகளில் நிகழ்ந்துள்ளது, வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் 1,385 சம்பவங்கள் நடந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ஏப்ரல் மாதம், துபாயின் அல் ராஸில் உள்ள அல் கலீஜ் தெருவில் ஐந்து மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர், மேலும் 9 பேர் காயமடைந்தனர்.  "பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன" என்று ஷார்ஜா சிவில் டிஃபென்ஸ் தலைவர் சாமி அல் நக்பி தி நேஷனிடம் கூறினார்.