பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் கட்சிக்கு எதிராக பெரும்பான்மை எம்பிக்கள் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 342 எம்பிக்களில் 174 எம்பிக்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.


இதனால், பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேர்ந்தது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த ஒரே பிரதமர் இம்ரான் கான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இதை தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன.


முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தற்போதைய தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், பிரதமராக பதவியேற்றார். ஆனால், இம்ரான் கான் கட்சியை சேர்ந்த 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.


இந்த ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 12 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 8 தொகுதிகளுக்கு, இஸ்லாமாபாத்தில் 3 தொகுதிகளுக்கும், சிந்து மாகாணத்தில் 9 தொகுதிகளுக்கும், பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.


இந்நிலையில், இம்ரான் கானின் கட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 33 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து பொது தேர்தலை முன்னதாகவே நடத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் இம்ரான் கான் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.


நேற்று மாலை இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷி, "கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 


33 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் கட்சியின் ஒரே வேட்பாளராக இம்ரான் கான் முன்னிலைப்படுத்தப்படுவார். இம்ரான் கான் தலைமையில் ஜமான் பார்க் லாகூரில் நேற்று நடைபெற்ற கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


 






இந்த தொகுதிகளில் இருந்து ராஜினாமா செய்த கட்சியின் எம்பிக்கள் இம்ரான் கானின் மாற்று வேட்பாளர்களாக களம் இறக்கப்படுவார்கள். இம்ரான் கட்சி எம்பிக்களின் ராஜினாமாவை தேசிய நாடாளுமன்ற சபாநாயகர் ராஜா பெர்வைஸ் அஷ்ரப் ஏற்றுக்கொண்டதையடுத்து அந்த இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டன.


இடைத்தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி வெற்றி பெறும் பட்சத்தில், இது ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக மாறிவிடும். எனவை, இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.