இந்தியாவில் வீடு வாங்குவது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. வீடு கட்டுவதற்காக வாங்கும் கடன்கள் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் சாமானியன் தனி வீடு வாங்குவது என்பது இன்னும் நிறைவேறாத கனவாகவே உள்ளது.  இந்த நிலையில் இத்தாலியில் 82 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை செய்யப்படுவது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

  


இயற்கை எழில் கொஞ்சும் சலேமி




இத்தாலி நாட்டில் சிசிலி பகுதியின் தென் மேற்கு பகுதில் உள்ள சலேமி நகரம் மிகவும் அழகு பொருந்திய வரலாற்று சிறப்புமிக்க தலங்களில் ஒன்று. இதை சுற்றி ஏராளமான திராட்சை தோட்டங்களும், ஆலிவ் தோப்புகளும் இருக்கின்றன. மிக பழைமையான நகரமான சலேமியில் 1600களில் கட்டமைக்கப்பட்ட சுவர்கள் இன்னும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கின்றன. 1968ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சலேமி நகரத்தில் இருந்து 4000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறிவிட்டனர்.   


குறைந்து போன பிறப்பு விகிதம் 


இத்தாலியில் திருமணவிகிதம், பிள்ளை பெறும் விகிதம் குறைந்து ஒண்டிக்கட்டைகளாக வீடுகளில் வாழும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்கள் இறந்தபின் அந்த வீடுகளை என்ன செய்வது என அரசுக்கு தெரியவில்லை. ஊர் முழுக்க அதே மாதிரி வீடுகளாக இருந்தால் என்ன செய்வது? அதனால் அந்த வீடுகளை எல்லாம் உள்ளாட்சி நிர்வாகமே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தலா ஒரு யூரோவுக்கு விற்கிறார்கள். அதாவது யூரோவுக்கு நிகரான இன்றைய ரூபாய் மதிப்பில் 82 ரூபாய் செலவு செய்தால் இத்தாலியில் வீடு கிடைக்கும். அதிகாரபூர்வமாக இதற்கு வலைதளம் துவக்கி இத்தாலி முழுக்க ஒரு யூரோ விலைக்கு வீடுகளை விற்று வருகிறார்கள்.



புத்துயிர் பெறும் பழைய நகரங்கள் 


தற்போது சலேமியில் இருக்கும் அனைத்து வீடுகளும் நகர கவுன்சிலுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. இவற்றை ஒரு யூரோவுக்கு விற்பனை செய்வதால் கைவிடப்பட்ட அழகிய சலேமி நகருக்கு புத்துயிர் கிடைக்கும் என நம்புவதாக சலேமி மேயர் டொமெனிகோ வெனுடி தெரிவித்துள்ளார். இப்போது சலேமி அடுத்தகட்டத்துக்கு தயாராகிவிட்டதாக அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கைவிடப்பட்ட இத்தாலிய நகரங்களில் மிகக் குறைவான விலைக்கு வீடுகள் விற்பனைக்கு வந்தன. மக்கள் வெளியேற்றத்தை தடுக்கவும், புதிய மக்களை அழைத்துவந்து பழைய நகரங்களுக்கு புத்துயிர் ஊட்டவும் குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தெற்கு இத்தாலியில் உள்ள சம்புகா நகரில் வெறும் ஒரு டாலருக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தில் பல்வேறு வெளிநாட்டவர்கள் இத்தாலியில் போட்டாப்போட்டி கொண்டு வீடுகளை வாங்கி வருகின்றனர். கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு இவ்வாறாக வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 


எச்சரிக்கும் எலான் மஸ்க்





ஒரு நாட்டில் மக்கள் தொகை குறைந்தால் நல்லது தானே என நினைக்கலாம். ஆனால் ஓய்வுபெறும் ஒவ்வொரு வயதானவரின் பென்சன், மருத்துவச் செலவை எல்லாம் கட்ட வரிகள், வேலைகள், தொழில்கள் அவசியம். அதை செய்ய இளைஞர்கள் அவசியமாகிறது. இவ்வாறு மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வந்தால் வயாதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நாட்டில் உற்பத்தி குறையும். இதானால் பெரும் பொருளாதார பாதிப்புக்கு அந்நாடு உள்ளாகும் என எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். குறைவான குழந்தைகளை பெற்றுக்கொள்வது சுற்றுசூழலை மேம்படுத்த உதவும் என்ற கோட்பாடு முட்டாள் தனம் என்று வசைபாடியுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், "உலகின் முக்கிய பிரச்சினை மக்கள் தொகை கூடுவது அல்ல, குறைவது. உலகின் முக்கிய தலைவர்கள், பணகாரர்கள் நமக்கு தவறான வழிகாட்டுகிறார்கள்" என குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.