ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் அதிகரித்து வந்தது.   உக்ரைனில் உள்ள கார்கி, மைக்கேல் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  


இந்நிலையில் உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவி தேவைப்பட்டால் அணுகுவதற்கு தமிழக அரசு தொடர்பு எண்களை அறிவித்துள்ளது.  உக்ரைனில் வாழும் தமிழர்கள் 044- 28515288, 9600023645, 9940256444 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், இந்தியா திரும்ப விரும்பும் தமிழர்கள்   www.nrtamils.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.


இதனிடையே உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்திய விமானம் சென்றது. ஆனால் அதை எச்சரிக்கை விடுத்து ரஷ்யா திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 


போருக்கான காரணம் என்ன?  


 


இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் சரணடைந்த பிறகு, உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. 1945 வாக்கில் அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் வல்லரசு நாடுகளாகின. 


இதையடுத்து சோவியத் ஒன்றியம், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக 1949-ல் அமெரிக்கா, நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பை (North Atlantic Treaty Organization -NATO) உருவாக்கியது. இதில், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்தன. இதன் தலைநகரம் பெல்ஜியத்தில் அமைக்கப்பட்டது. 


இந்த நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள நாடுகளின்மீது பிற அந்நிய நாடுகள் படையெடுத்தால், சக உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு உறுதுணையாகப் படையெடுப்பை மேற்கொள்ளும். இந்த பாதுகாப்பு அம்சத்தால், நேட்டோ உருவாக்கப்பட்டபோது 12 ஆக இருந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 30 உறுப்பு நாடுகளாக உள்ளது. இதில், கடைசியாக தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வட மாசிடோனியா இணைந்தது. மேலும் போஸ்னியா, ஹெர்ஸ்கோவினா, ஜார்ஜியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இதில் இணைய ஆர்வமாக இருந்தன. இதற்கு நேட்டோவும் இசைந்தது. 


இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்தது. இதற்கான காரணத்தை அறிய முதலில், சோவியத் ஒன்றிய வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. 



ஆதாரப்புள்ளி:-


1917-ல் ஏற்பட்ட அக்டோபர் புரட்சி, சோவியத் ஒன்றியத்துக்கான முதல் புள்ளியாக இருந்தது.  1922 முதல் பெரும் வல்லரசாக, 10க்கும் மேற்பட்ட குடியரசுகளை சோவியத் ஒன்றியம் கட்டியாண்டது. இந்த அரசின் அதிகாரம் பரவலாக்கப்படாமல், ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட்டதாக இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை, பின்னாளில் பெரிதாக வெடித்தது. 


சோவியத் ஒன்றியத்தில் இருந்த நாடுகள் 1990களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதற்குக் கீழ் இருந்த 10-க்கும் மேற்பட்ட பகுதிகள் பிரிந்து சென்று, சுதந்திரம் பெற்றதாக அறிவித்துக்கொண்டு தனித்தனி நாடுகளாகின. இதில் இரண்டாவது சக்திவாய்ந்த நாடாக இருந்த உக்ரைனும் அடக்கம். வாக்கெடுப்பில் 92.3% பெற்று, சுதந்திரம் பெற்றதாக அறிவித்துக்கொண்டது உக்ரைன். ரஷ்யாவும் பலம்மிக்க தனி நாடானது.


எதிர்ப்பு தெரிவித்த உக்ரைன் 


சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அதன் வெளிநாட்டுக் கடன்களைத் தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட ரஷ்யா, இருந்த சர்வதேச சொத்துகளையும் தனதாக அறிவித்தது. இதற்கு உக்ரைன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. 1991 சட்டத்தின்படி, வெளிநாட்டு சொத்துகளில் தங்களுக்கும் பங்கிருப்பதாக சர்வதேச நீதிமன்றங்களில் அறிவித்தது உக்ரைன். இந்த மோதல் 1991-ல் இருந்தே தொடர்ந்து வருகிறது. 


  


1990 வரை இருந்த சோவியத் ஒன்றியத்தின் பலம், ரஷ்யாவுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்று அமெரிக்கா நினைத்தது. இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அதையே விரும்பின. இதனால் ரஷ்யாவின் ஆளுமையைக் குறைக்கத் திட்டமிட்டன.


சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி, ரஷ்யாவைச் சுற்றிலும் உள்ள சிறிய நாடுகளை நேட்டோவில் இணைக்க ஆரம்பித்தன. இந்த சூழலில் ஆரம்பத்தில் இருந்தே முரண்பட்ட ரஷ்யாவை எதிர்த்து, நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் அதிக ஆர்வம் காட்டியது. இந்தப் போக்கு ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. தன்னைச் சுற்றிலுமுள்ள பிற நாடுகள் இணைவதையே வெறுப்புடன், கையறு நிலையில் வேடிக்கை பார்த்த ரஷ்யா, உக்ரைன் கண்டிப்பாக நேட்டோவுடன் இணையக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 


முதல் போர்


கலாச்சார, மொழி ரீதியில் ரஷ்யாவை ஒத்திருக்கும், தன் எல்லையில் இருக்கும் நாடு, அமெரிக்கா உடன் கைகோப்பதும், அமெரிக்கப் படைகள் தங்கள் எல்லையிலும் நிற்பதும் ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. எனினும் உக்ரைன் மக்கள் ரஷ்யக் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதை வெறுத்தனர். ரஷ்ய எதிர்ப்பையும் மீறி, அந்நாட்டு ஆதரவில் அமைந்திருந்த அரசை 2014-ல் போராட்டம் மூலம் பெருமக்கள் திரள் கீழே இறக்கியது. இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. 


அந்தப் போரில் சுமார் 14 ஆயிரம் பேர் இறந்ததாகத் தகவல் வெளியானது. முடிவில் உக்ரைனின் தென்பகுதியில் உள்ள க்ரீமியா தீபகற்பத்தை (Crimean Peninsula) ரஷ்யா கைப்பற்றியது. வர்த்தகக் காரணங்களுக்கு இந்தப் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டே க்ரீமியாவைப் பிடித்தது. இதனால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. எனினும் ரஷ்யா தனது முடிவில் பின்வாங்கவில்லை. 


இதற்கிடையே அதேநேரத்தில் கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் தொடர்ந்து உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடினர். உக்ரைனில் தேர்தல் வந்தது. தொலைக்காட்சியில் அதிபராக நடித்த காமெடி நடிகர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்று நிஜ அதிபரானார். முன்பு தேர்தல் வாக்குறுதியாக, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் ரஷ்ய- உக்ரைன் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அறிவித்திருந்தார்.  


 
2015-ல் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரஷென்கோ - ரஷ்யாவின் விளாடிமிர் புதின் இடையில் மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆதரவோடு இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மின்ஸ்க் ஒப்பந்தத்தை மீண்டும் தற்போது கொண்டுவர வேண்டும் என்றும் மேலும் சில நிபந்தனைகளையும் ரஷ்யா விதித்தது. எனினும் இதற்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ளவில்லை. 


மின்ஸ்க் ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு ரஷ்யா அழுத்தம் கொடுக்க, மேற்கத்திய நாடுகளிடம் உதவி கோரினார் ஜெலன்ஸ்கி. வெளிப்படையாகவே நேட்டோவில் சேர விரும்புவதாகவும் பேச ஆரம்பித்தார். 


வெகுண்டெழுந்த ரஷ்யா 


இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, தன்னுடைய படைகளைக் கொண்டு வந்து, உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில் நிறுத்தியது. சுமார் 1,50,000 பேர் அங்கே குவிக்கப்பட்டனர். கூடவே மருத்துவ உபகரணங்கள், அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றையும் ரஷ்யா வைத்துள்ளதால் அங்கே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தாண்டி அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது. போர் எதையும் நடத்தவில்லை என்று தொடர்ந்து புடின் கூறிவருகிறார். 


உக்ரைன் இன்னமும் நேட்டோவில் இணையவில்லை என்பதால், அங்கு நேட்டோ படைகளை அனுப்பமுடியாது. அதனால், நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் உக்ரைனுக்கு அண்டை நாடுகளான எஸ்தோனியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஆதரவுப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 


 


புடின் கோரிக்கைகள் என்ன? 


இதுதொடர்பாக 8 அம்சக் கோரிக்கைகளையும் புடின் முன்வைத்தார். அதன்படி,
1997-க்குப் பிறகு நேட்டோவில் இணைந்த நாடுகள் அனைத்தில் இருந்தும் நேட்டோ படைகள் வெளியேற வேண்டும். ஆயுதங்களைத் திரும்பப் பெற வேண்டும். (இதன்மூலம் பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய நாடுகளும், நேட்டோவில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும். )


ரஷ்யாவின் பாதுகாப்புக்கு சட்டரீதியான உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் அளிக்க வேண்டும். உக்ரைனில் அமெரிக்காவில் போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. நேட்டோவில் உக்ரைன், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 


இதன்மூலம், கிழக்கு ஐரோப்பாவை முழுமையாகத் தன் வசப்படுத்தத் திட்டமிட்டார் புடின். எனினும் இதற்கு நேட்டோ அமைப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நிலைமை இன்னும் மோசமானது. இதனால் கிழக்கு உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது. 


அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்தது சர்ச்சைக்கு உள்ளானது. உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பின் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளதாகவும், மாஸ்கோ எல்லையில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாகக் கூறினாலும், விரைவில் தாக்குதல் உறுதி என்றும் அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து, ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறுவதாக செய்தி வெளியானது. ஆனால் சில மணி நேரத்திலேயே உக்ரைன் எல்லையில் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து உக்ரைன் ஆயுதப் படைகளும் குவிக்கப்பட்டன.