உலகின் மிகவும் ஆக்டிவ்வான பிரமாண்ட எரிமலையான மௌனா லோவா கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக வெடித்ததாக அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஹவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து திங்கள் அன்று காலை முதல் அங்கே அவசர சேவைகள் துரிதப்படுத்தப்பட்டன. 


அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  இரவு 11:45 மணிக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தது.இதன்படி உள்ளூர் நேரம் ஞாயிறு காலை 9:45 மணிக்கு ஹவாய் தேசிய எரிமலைகள் பூங்காவிற்குள் எரிமலை வெடித்த 15 நிமிடங்களுக்குப் பிறகு நிலைமை மாறினால் அதனால் அண்டைப் பகுதிகளில் தீங்கு ஏற்படலாம் என ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது.


"இந்த நேரத்தில், எரிமலைக்குழம்புகள் மலை உச்சிப்பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அதனால் கீழே இருக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது" என்று ஆய்வு மையம் தனது இணையதளத்தில் கூறியுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை மதிப்பாய்வு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது






பசிபிக் பகுதியில் உள்ள ஹவாயின் பிரதான தீவில் ஏற்பட்ட இந்த வெடிப்பு, கால்டெரா என்று அழைக்கப்படும் எரிமலையின் உச்சியில் உள்ள படுகையில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், "வெடிப்புத் துவாரங்கள் இன்னும் அதிகரிக்கத் தொடங்கினால், எரிமலை லாவாக்கள் வேகமாக கீழ்நோக்கி நகரக்கூடும்" என்று அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


USGS எரிமலை கண்காணிப்பு அலுவலகம் திங்கள் காலை வெளியிட்ட ட்வீட்டில், ”எரிமலை லாவா கால்டெரா பகுதிக்கு வெளியே சிதறுவது போலத் தெரிந்தாலும் வெடிப்பு துவாரங்கள் வெறும் கால்டெராவுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன”


ஹவாய் எரிமலை ஆய்வகம் பேரிடர்கால மீட்புக்குழுவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டது என்றும் அதன் ஊழியர்கள் எரிமலையின் மீது வான்வழி ஆய்வு நடத்துவார்கள் என்றும் அந்த ஆய்வகம் கூறியுள்ளது. இந்த எரிமலை 13,674 அடி உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.