ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, தங்கள் காவலில் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதி எலும்பும் தோலுமாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதைப் பார்த்து கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வைத்த கோரிக்கையை நிறைவேற்ற, ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது. அது என்ன தெரியுமா.? பார்க்கலாம்.

ஹமாஸ் வெளியிட்ட வீடியோ எதற்காக தெரியுமா.?

காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், காசாவுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை மறுத்து வருகிறது. இதனால் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.  இந்நிலையில், இஸ்ரேல் போட்டுள்ள தடையினால், காசாவில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல், இஸ்ரேலிய கைதிகளும் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை காட்டும் விதமாக, ஹமாஸ் இந்த வீடியோ வெளியிட்டுள்ளது.

"பணயக் கைதிகள் வேண்டுமென்றே பட்டினியால் கொல்லப்படவில்லை, அவர்கள் எங்கள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் சாப்பிடும் அதே உணவையே சாப்பிடுகிறார்கள்“ என்று கூறியுள்ள ஹமாஸ், அவர்களுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல்

இந்த வீடியோ வெளியான நிலையில், அதில் இருப்பவர் குறித்த தகவலை, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், அந்த நபர் இவ்யடர் டேவிட் என்றும், 668 நாட்களாக அவர் ஹமாஸின் பிடியில் சிக்கியுள்ளதாகவும்,  அவர் கடத்தப்படுவதற்கு முன் உள்ள புகைப்படத்தையும் இணைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர், தற்போது நடக்கும் எலும்புக் கூடாக உள்ளதாகவும், இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் இப்படித் தான் நடத்துகிறது என்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களை வெளியே விடுங்கள் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வீடியோவை பார்த்து நெதன்யாகு செய்தது என்ன.?

ஏற்கனவே, இஸ்ரேலில் ஆளும் பிரதமர் நெதன்யாகு அரசுக்கு எதிராக போராடி வரும் அந்நாட்டு மக்களின் சீற்றத்தை இந்த வீடியோ மேலும் அதிகரித்தது. இதையடுத்து, இஸ்ரேலிய கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி வழங்க வேண்டும் என்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியறுத்தினார். செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜூலியன் லாரிசனை தொலைபேசியில் அழைத்து பணயக் கைதிகளுக்கு உடனடியாக உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்று நேதன்யாகு கோரியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் விதித்த நிபந்தனை

இந்நிலையில், இந்த சூழலை பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. அதாவது, காசாவிற்கு மனிதாபிமான உதவி வழித்தடங்கள் திறக்கப்பட்டு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டால், இஸ்ரேலிய கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவ அனுமதிப்போம் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.