சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டியான சிங்க் ஒன்றை சுமந்து சென்றார் பிசினஸ் மேக்னட்டான எலான் மஸ்க்.


டுவிட்டர் நிறுவனத்தை, 54.20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க உள்ளார் எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க அவர் முன்வந்தார்.


இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 


கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அவர் அறிவித்தார். பின்னர் சில வாரங்களிலேயே தனது முடிவில் இருந்து பின் வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால்  ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது. 


இந்நிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு அக்டோபர் 28-க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


தான், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு எலான் மஸ்க் சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் சிங்க் ஒன்றை எடுத்துச் சென்றார்.


இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவொன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் "டுவிட்டர் தலைமை அதிகாரி" என்றும் அவர் பெயரை மாற்றியுள்ளார். முன்னதாக, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அதிகாரி லெஸ்லி பெர்லேண்ட் கூறுகையில், "டுவிட்டரை கையகப்படுத்தும் ஒப்பந்தம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், எலான் மஸ்க் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்திற்கு வரவுள்ளார்" என்று ஊழியர்களுக்கு ஏற்கனவே மின்னஞ்சல் வாயிலாக தகவல் அளித்தார்.


முன்னதாக, 75 சதவிகித பணியாளர்களை பணிநீக்கம் செய்வோம் என்ற எலான் மஸ்க்  கூறியதைத் தொடர்ந்து தற்போதைய நிறுவன மனிதவள மேலாண்மைக் குழு அதனை மறுத்துள்ளது.


வாஷிங்டன் போஸ்ட், நேர்காணல்கள் மற்றும் பதிவுகளை மேற்கோள் காட்டி, பில்லியனர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான தனது முயற்சியில் மொத்தமுள்ள 7,500 ஊழியர்களில் 75 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்த நிலையில் ட்விட்டர் ஊழியர்கள் பதற்றம் அடைந்து இருந்தனர். இதனை அவர் கூறியது வைரலானதற்கு ஒரு நாள் கழித்து ட்விட்டர் நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.


நிறுவனம் பணிநீக்கங்களுக்கான திட்டங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை என்பதை ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தியது. ஆனாலும் மஸ்க் தான் வருங்கால முதலாளி என்பதால், இது அவர் வாங்கிய பிறகு நடைமுறைக்கு வந்தால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளது.