இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6. ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்திய பெருங்கடலில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 


இலங்கை தென்மேற்கே நேற்று மாலை இந்தியப் பெருங்கடலின் மத்திய பகுதியில் நான்கு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், 10 கிமீ ஆழத்தில் பதிவாகியிருந்தது, அடுத்தடுத்த மூன்று நிலநடுக்கங்களும் முறையே 5.2 (ஆழம் 10 கிமீ), 5.8 (ஆழம் 7.7 கிமீ) மற்றும் 5.0 (ஆழம் 10 கிமீ) என்ற அளவில் பதிவாகியுள்ளன. மேலும் கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த, நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தகவல் தெரிவித்துள்ளது. 


இதை தொடர்ந்து, இன்று காலை 10.49 மணியளவில் இலங்கையை ஒட்டிய இந்திய பெருங்கடலில் 6.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 



ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு தற்போது எந்த சுனாமி ஆபத்தும் இல்லை. எனவே இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பனாவையாக அறிவிக்கப்படுகின்றது.இந்த அறிவிப்பு அதிகாரம் பெற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வெளியிடப்படும் அறிவிப்பாகும் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என இலங்கையில் உள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 






சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 


அதேபோல், இந்தோனேஷியா அருகேயுள்ள சுமத்ரா தீவு பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. கடந்த 2004ம் ஆண்டு சமத்ரா தீவுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்தான் சுனாமி ஏற்பட்டு இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 


முன்னதாக, கடந்த நவம்பர் 14ம் தேதி இந்திய பெருங்கடலில் 6.2 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்ர்வு மையம் தெரிவித்தது. 


அப்போது, இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவிலிருந்து 1,295 கிமீ தொலைவில் மதியம் 12:30 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்தது.