காணாமல் போன அழகுக்கலை நிபுணர்:


ஜெர்மனியின் முனிச் பகுதியில் வசித்து வந்த 24 வயதான அழகுக்கலை நிபுணர் ஷஹ்ரபான். ஈராக் வம்சாவளியான இவர் இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி சமூக வலைதளங்களில் பிரபலமானார். திருமணமாகி விவாகரத்தான இவர்,  ஷேகிர் கே என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில்,  கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு ஷஹ்ரபான் வீட்டில் இருந்து சென்றார்.


அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரை தேட தொடங்கியுள்ளனர். உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் இடங்கள் என எங்கு தேடியும், ஷஹ்ரபான் கிடைக்காததால் போலீசில் புகாரளித்துள்ளனர்.  அதனடிப்படையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதியன்று இங்கோல்ஸ்டாட் என்ற நகரில் ஷஹ்ரபானின் காரை போலீசார் கண்டுபிடித்தனர். 


காரில் கிடந்த பிணம் 


அந்த காருக்குள் இளம்பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருந்தார். உடல் வாகு, அதிகப்படியான சிகை அலங்காரம் மற்றும் நீளமான முடி ஆகிய காரணங்களை கொண்டு,  காருக்குள் கிடந்தது ஷஹ்ரபான் தான் என அவரது பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர். போலீசாரும் அதை நம்பி,  காரில் இருந்த உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர்.


பிரேத பரிசோதனையில் உண்மை அம்பலம்:


போலீசாரின் விசாரணைக்கு மத்தியில் வெளியான உடற்கூறய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதன்படி, காருக்குள் இருந்து கைப்பற்றப்பட்டது ஷஹ்ரபான் உடல் அல்ல என்பதும், ஜெர்மனியை சேர்ந்ந மற்றொரு மாடல் அழகியான கதீட்ஜா ஓ (23) என்பதும் தெரியவந்தது. கைரேகை உள்ளிட்ட அடையாளங்கள் மூலம் கொல்லப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.


துப்பு துலங்கியது


இதனால் குழம்பிய போலீசார் தேடுதல் பணியை தீவிரமாக்கி, தலைமறைவாக இருந்த ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிர் கே ஆகியோரை அடுத்த இரண்டு நாட்களில் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இதனிடையே, ஷஹ்ரபானின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ததில், அவர் இன்ஸ்டாகிராமில் பல்வேறு போலி கணக்குகளை தொடங்கி, பலருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.


திடுக்கிடும் தகவல்கள் 


அதுகுறித்து கைதான நபர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ”மாடல் அழகி ஷஹ்ரபான் குடும்ப பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆட முடிவு செய்தார். அதற்கு தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடி கொலை செய்து, தான் இறந்துவிட்டதாக பெற்றோரையும், போலீசாரையும் நம்ப வைக்க திட்டமிட்டார்.


இந்த திட்டத்தை செயல்படுத்த தனது காதலரையும் அவர் கூட்டு சேர்த்துக்கொள்ள,  இருவரும் சேர்ந்து ஷஹ்ரபானை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடிவந்தனர். இதற்காக இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகளை தொடங்கி தன்னை போன்ற பெண்ணை தேடி, அவர்களுடன் பேசவும் தொடங்கியுள்ளார். இந்த சூழலில்தான், அப்போதுதான் மாடல் அழகி கதீட்ஜா, ஷஹ்ரபானின் வலையில் சிக்கினார். கதீட்ஜாவுடன் இன்ஸ்டாகிராமில் சகஜமாக பேசி பழகிய ஷஹ்ரபான், அவ்வப்போது அழகுசாதன பொருட்களையும் வாங்கிக் கொடுத்து நெருக்கத்தை அதிகரித்துள்ளார்.


முகத்தில் 50 முறை குத்திக் கொலை:


அந்த வகையில் கொலை நடந்த தினத்தில் அழகு சாதன பொருட்களை தருவதாக கூறி கதீட்ஜாவை,  ஷஹ்ரபான் நேரில் அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற கதீட்ஜாவை ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிர் காரில் அழைத்து சென்றனர். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் காருக்குள் வைத்து கதீட்ஜாவை இருவரும் குத்திக்கொலை செய்தனர். முகம் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஷஹ்ரபான், கதீட்ஜாவின் முகத்தில் 50க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி முகத்தை சிதைத்துள்ளனர். பின்பு அங்கிருந்து தப்பி ஓடியது அம்பலமாகியுள்ளது.