Canada Flight Crash: கனடாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் 80 பேர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் விமான விபத்து:
டெல்டா ஏர் லைன்ஸால் இயக்கப்படும் உள்ளூர் ஜெட் விமானம், திங்கட்கிழமை டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் பனிப்புயலைத் தொடர்ந்து, வீசிய பலத்த காற்றுடன் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. அதில் இருந்த 80 பேரில் 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் மொத்தம் 80 பேர், 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் மூன்று பேர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். விமானம் மினியாபோலிஸ்-செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தரையிறங்கியதும் ஓடுபாதையில் இருந்து வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் உரிய பரிசோதனைக்குப் பிறகு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் விபத்துகள்:
விபத்துக்குள்ளான விமானம், அதன் துணை நிறுவனமான எண்டெவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் CRJ900 விமானம் என்பதை டெல்டா உறுதிப்படுத்தியது. கனடாவின் பாம்பார்டியரால் தயாரிக்கப்பட்ட அந்த CRJ900 விமானம், 90 பயணிகள் வரை அமரக்கூடியது. வாஷிங்டன் டிசியின் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதில், இரண்டு விமானங்களிலும் இருந்த 68 பேரும் கொல்லப்பட்ட மூன்று வாரங்களுக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு:
விபத்துக்குப் பிறகு டெல்டா ஏர் லைன்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “ஆரம்பகட்ட தகவல்களின்படி எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ”எண்டேவர் ஏர் நிறுவனத்தால் CRJ-900 விமானத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும் டெல்டா கனெக்ஷன் விமானம் 4819, திங்கட்கிழமை பிற்பகல் ET* சுமார் 2:15 மணியளவில் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் (YYZ) ஒரு விமான விபத்தில் சிக்கியது. இந்த விமானம் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (MSP) புறப்பட்டது" என்றும் விளக்கமளித்து உள்ளது.
விபத்து குறித்து கனடா மற்றும் அமெரிக்காவில் விசாரணைகளுக்காக டெல்டா ஏர் லைன்ஸ் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. "கனடாவில், தனிநபர்கள் 1-866-629-4775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவில், இருந்து 1-800-997-5454 என்ற எண்ணைப் பயன்படுத்தி தங்களை தொடர்பு கொள்ளலாம்" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ”விவரங்களை உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் மிகவும் தற்போதைய தகவல்கள் கிடைத்தவுடன் http://news.delta.com இல் பகிர்வோம். இதற்கிடையில், தயவுசெய்து கவனமாக இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்” என டெல்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.