வேலைவாய்ப்பு பல ஆண்டுகளாக பல விநோதத் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது மற்றும் இளைஞர்களுக்கு புதிய தொழில் வழிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த தொழில்முறைகளில் சில வழக்கத்திற்கு மாறானதாக இருக்கலாம். அந்த வரிசையில் தலைமை மிட்டாய் அதிகாரிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வேலையின் முக்கிய அம்சமே சுவையான சாக்லேட் கேண்டிகளை சுவைக்க வேண்டும். கேண்டி ஃபன்ஹவுஸ் என்ற கனேடிய நிறுவனத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படி ஃபன்னாக ஒரு அறிவிப்பை பார்த்ததும் யாரோ பகடி செய்ய இப்படிச் செய்துள்ளார்கள் என நினைத்தால் தவறு. இது ஒரு உண்மையான வேலை வாய்ப்பு. இந்த வேலைக்கு வழங்கப்படும் சம்பளத்தைக் கேட்டால் வாயைப் பிளப்பீர்கள்.






பணி விவரத்திற்கு ஏற்ப தலைமை மிட்டாய் அதிகாரிக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் சம்பளமாக வழங்கப்படுகின்றன. தலைமை மிட்டாய் அதிகாரியின் வேலையே சாக்லேட் பார்கள் முதல் மிட்டாய்கள் வரை பலவிதமான மிட்டாய் தயாரிப்புகளுக்கு அவர் டேஸ்ட் மாஸ்டராக இருக்க வேண்டும்.


நிறுவனம் அவருக்கு 78,000 டாலர்கள் (ரூ. 61 லட்சத்திற்கு மேல்) முதல் 100,000 டாலர்கள் (ரூ. 79 லட்சத்திற்கு மேல்) வரை சம்பளமாக வழங்குகிறது. மேலும், மனதைக் கவரும் இந்த வேலைக்குத் தகுதிபெற நீங்கள் குறைந்தபட்சம் ஐந்து வயதைப் பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. 
இது போதாது என்று நாம் வீட்டிலிருந்தே வேலை செய்தால் போதுமானது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலை அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2022.


வேலையின் ஒரு பகுதியாக, பணியமர்த்தப்பட்ட தனிநபர் ஒவ்வொரு மாதமும் 3,500 மிட்டாய்களை சுவைக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் 117 மிட்டாய்களை ருசிப்பார்கள். மிட்டாய் பிரியர்கள் கவனத்துக்கு!