சீனாவின் உளவு பலூன் என சொல்லப்பட்ட ஒன்றை அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்தது பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் சீனாவிற்கு செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த சர்ச்சை வெடித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முழு விளக்கமும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையின் பேரில், உடனடியாக அந்த பலூனை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். 


ஆனால், அந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பெண்டகன் (அமெரிக்க பாதுகாப்புத்துறை) எச்சரித்தது. இதன் காரணமாக, அந்த பலூனை சுட்டு வீழ்த்துவதில் குழப்பம் நீடித்தது. இருப்பினும், அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.


இதற்கு மத்தியில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், சீன பலூன் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளை டார்கெட் செய்தே சீனா அந்த உளவு பலூனை இயக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.


சனிக்கிழமை அன்று சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் பற்றிய பல்வேறு தகவல்களை இந்தியா உள்பட நட்பு மற்றும் கூட்டு நாடுகளிடம் அமெரிக்க அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். திங்களன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மன், வாஷிங்டனில் உள்ள சுமார் 40 தூதரகங்களின் அதிகாரிகளிடம் இது குறித்து விளக்கினார்.


சீன பலூன் தொடர்பாக புகழ்பெற்ற தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான செய்தியில், "சீனாவின் தெற்குக் கடற்கரையில் உள்ள ஹைனான் மாகாணத்திற்கு வெளியே பல ஆண்டுகளாக இயங்கி வரும் கண்காணிப்பு பலூன், ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இராணுவச் சொத்துக்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகள், உளவு அதிகாரிகள் ஆகியோரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் சீன பலூன் தொடர்பான தகவல்களை தி வாஷிங்டன் போஸ்ட் சேகரித்துள்ளது.


இம்மாதிரியான ஏர்ஷிப்களை (வான்கப்பல்) சீன வான்படை இயக்கியுள்ளது. ஐந்து கண்டங்கள் மேல் இவை பறந்தததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்ட பலூனை தவிர சமீபத்திய ஆண்டுகளாகவே, ஹவாய், புளோரிடா, டெக்சாஸ் மற்றும் குவாம் ஆகிய இடங்களிலுக்கு மேலே குறைந்தது நான்கு பலூன்கள் காணப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.