சீனாவின் உளவு பலூன் ஒன்று அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்தது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் பீஜிங்குக்கு செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த சர்ச்சை வெடித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளது.


உளவு பலூன்


தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. வட அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் டிஃபன்ஸ் கமாண்ட் (NORAD) "இந்த உளவு பலூனை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த உளவு பலூன் அளவில் மூன்று பேருந்துகளை ஒன்றாக இணைத்ததுபோல் இருக்கின்றது. அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறக்கும் இந்த உளவு பலூனால் எவ்வித தகவலும் பெறமுடியாத படிக்கு பாதுகாப்பு வளையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.


அதிபரிடம் விளக்கம்:


சீன உளவு பலூன் அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறந்தது தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முழு விளக்கமும் அளிக்கப்பட்டுவிட்டதாக பென்டகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


அதேபோல் முப்படை கூட்டு தளபதி ஜெனரல் மார்க் மில்லி, அமெரிக்காவின் வடக்கு கமாண்ட் தளபதி க்ளென் வேன்ஹெர்க் ஆகியோர் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அலட்சியம் காட்டக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


மர்ம பலூன்


அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணு ஆயுத ஏவுதளம் உள்ளது. அமெரிக்காவில் மொத்தமுள்ள 3 அணு ஆயுத ஏவுதளங்களில் இந்த தளமும் ஒன்று. இந்த விமானப்படை தளம் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டதாகும். 


இந்நிலையில், இந்த அணு ஆயுத ஏவுதளத்தின் வான் பரப்பில் பல அடி உயரத்தில் கடந்த புதன்கிழமையன்று வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது. இந்த பலூன் சீனாவின் உளவு பலூன் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


சீனாவின் உளவு வேலை:


அணு ஆயுத ஏவுதளத்தின் ரகசிய தகவல்களை சீன ரகசிய உளவு பலூன் சேகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக ரீதியிலான விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு அதிகமான உயரத்தில் அந்த உளவு பலூன் பறப்பதாகவும், தற்போது வரை அந்த பலூன் நிலத்தில் உள்ள மக்களுக்கு ராணுவ ரீதியாகவோ வேறு ரீதியாகவோ எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி தெரித்துள்ளார். 


சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ரகசிய தகவல்களை சேகரிப்பதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பலூனை தரையிறக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.