தெற்கு சூடானில் மேய்ச்சல் குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். போப் பிரான்சிஸ் சூடானுக்கு வருகை தரும் சூழலில் நடந்த இந்த மோதல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


21 பேர் உயிரிழப்பு


தெற்கு சூடானில் பிரதானமாக கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள். அங்கு மேய்ச்சல் தொழில் தான் பிரதானமாக இருக்கிறது. பல்வேறு மேய்ச்சல் குழுக்கள் இருக்கின்றன. அவ்வப்போது இந்தக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படும். ஆனால் அந்த மோதல்கள் எல்லாமே உயிர்ப்பலியில் தான் முடியும். அவ்வாறே வியாழக்கிழமை தெற்கு சூடானில் ஏற்பட்ட மோதலும் 21உயிர்களைப் பலி வாங்கி முடிந்துள்ளது.


தெற்கு சூடான் நாடு, 2011-ல் சூடானில் இருந்து சுதந்திரம் அடைந்தது. ஆனால் சிறிது காலத்திலேயே உள்நாட்டுப் போர் ஆரம்பித்து, அதில் 3.8 லட்சம் மக்கள் பலியாகினர். ஒரு வழியாக உள்நாட்டுப் போர் 2018-ல் முடிவுக்கு வந்தது. ஆனால், ஆயுதம் ஏந்திய உள்நாட்டு போராளிகள் மற்றும் போட்டி இனக்குழுக்களால் நடத்தப்படும் வன்முறையால் நாடு தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், நேற்று மத்திய ஈக்வடோரியாவின் காஜோ-கேஜி கவுண்டியில் உள்ள, கால்நடை முகாம் மீது ஆயுதமேந்திய மேய்ப்பர்கள் பழிவாங்கும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மாவட்ட ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பழிக்குப் பழியாக நடந்த இந்த தாக்குதலுக்கு கவுண்டி ஆணையர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெற்கு சூடானின் பல பகுதிகளில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மக்களின் அமைதிக்காக பிரார்த்தனை செய்யும்படி போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். அத்துடன், கேன்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து தேவாலய பொதுச்சபை நடுவர் ஆகியோருடன் போப் பிரான்சிஸ் இன்று தெற்கு சூடானில் அமைதி யாத்திரை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மன்றாடிய போப் பிரான்சிஸ்:


தெற்கு சூடானில் தொடர்ச்சியாக அமைதியை நிலைநாட்டும் முயற்சியைப் போப் எடுத்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த போப்பின் அமைதி முயற்சி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆம் போப் பிரான்சிஸ் மரபுக்கு மாறாக, சூடானின்  சர்ச்சைக் குழுக்களின் தலைவர்களையும் மற்றும் 3 துணை அதிபர்களையும் வாடிகன் வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். "நான் உங்களின் சகோதரனாக கேட்க விரும்புவது அமைதியை நிலைநாட்டுங்கள். எனது இதயத்தில் இருந்து இந்த கோரிக்கையைவிடுக்கிறேன். முன்னேறிச் செல்லும் வழியை பாருங்கள். உங்கள் பிரச்சினைகளை சரி செய்யுங்கள்" இவ்வாறு கூறிய போப் பிரான்சிஸ், அந்த தலைவர்களின் காலில் விழுந்து மன்றாடியதோடு, அவர்கள் கால்களில் முத்தமிட்டார்.


இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் இதுவரை சூடானில் இனவாத குழுக்களுக்கு இடையேயான மோதல் அதுவும் கொலைவெறித் தாக்குதல்கள் முடிந்தபாடில்லை. இதனால் அப்பாவி பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.