கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதிலும் பரவி தற்போது வரை உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. கொரோனா வைரஸை உகான் நகரில் உள்ள சீனா அரசின் வைரஸ் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் சீனா மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் சீனாவில் மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பாதித்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பறவைக்காய்ச்சல் பாதிப்பு என்பது பறவைகளுக்குதான் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் மனிதர்களுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.




சீனாவில் உள்ள ஜென் ஜியாங் நகரில் 41 வயது உள்ள நபருக்கு H10N3 வகை வைரஸ் தொற்று மூலம் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீனதேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள கிழக்கு ஜியாங்க் மாகாணத்தில் H10N3 வகை பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. H10N3 வகை வைரஸ் பாதிப்புக்குள்ளான 41 வயதுள்ள நபரின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோழிகளிடம்இருந்தே இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக சீன தேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வகை வைரஸ்கள் தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். கடந்த மே மாதம் 28ஆம் தேதியன்று தொடர்புடைய நபருக்கு இந்த வகை பறவை காய்ச்சல் பாதிப்பை உறுதி செய்ததாக கூறும் சீன தேசிய சுகாதார அமைப்பு இந்த வகை வைரஸ் எப்படி பரவியது என்பதை கூறவில்லை. மனிதனுக்கு H10N3 வகை வைரஸ் தொற்று பாதிப்பு என்பது உலகில் இதுவரை பதிவாகாத நிலையில் தற்போது முதன்முறையாக ஒருவருக்கு பாதித்துள்ளது உலகின் கவனத்தை மீண்டும் சீனாவின் மீது உற்றுநோக்க வைத்துள்ளது.



இந்த வகை வைரஸ்கள் கோழிப்பண்ணையில் தான் உருவாகி இருக்க வேண்டும் என கூறும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த வைரஸ்களால் பெரிய அளவில் பரவும் ஆபத்து குறைவு என கூறுகின்றனர். சீனாவில் பல வகைகளில் பறவைக்காய்ச்சலுக்கான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் H5N8 வகை வைரஸ்களால் மனிதர்களுக்கு குறைந்த அளவிலான பாதிப்பையும் காட்டுப்பறவைகள் மற்றும் கோழிகளுக்கு அதிக பாதிப்பையும் ஏற்படுத்தும் என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வடகிழக்கு சீனாவில் உள்ள ஷென்காய் நகரில் காட்டுப்பறவைகளிடம் இருந்து H5N6 என்ற வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.