Just In





China Vs America Tariffs: வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
சீனா மீதும் அமெரிக்கா வரிகளை விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக, சீனாவும் வகை வகையாக பிரித்து வரிகளை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஏற்கனவே கூறியதுபோல், சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளுக்கான வரியை உறுதி செய்ததோடு, இன்று முதல் அமல்படுத்தியும் உள்ளார். இதற்கு, கனடா ஏற்கனவே பதிலடி கொடுத்துவிட்ட நிலையில், சீனாவும் பல்வேறு வகையான வரிகளையும், கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா மீது விதித்துள்ளது.
சீனாவிற்கு வரி விதிப்பை அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், சீனா உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். அதோடு நிற்காமல், சீனாவிற்கு ஏற்கனவே உள்ள இறக்குமதி வரியோடு, 10% கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதையடுத்து, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்கள் மீதான வரி 20 சதவீதமாக உயர்ந்தது. தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என சீனா மறுத்தபோதிலும், தற்போது வரி விதிப்பை ட்ரம்ப் அமல்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த சீனா
வரி அமலுக்கு வருவதாக ட்ரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்க விவசாய மற்றும் உணவுப் பொருட்களுக்கு 10 முதல் 15% வரியை விதித்ததோடு, பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரியை பொறுத்தவரை, சோயாபீன்ஸ், அரிசி, பன்றி மற்றும் மாட்டிறைச்சி, பால் பொருட்கள், நீர் பொருட்கள், காய்கறி, பழங்கள் மீதான இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கோதுமை, சோளம், பருத்திப் பொருட்கள், கோழி ஆகியவற்றின் இறக்குமதி மீது 15 சதவீத வரியையும் விதித்துள்ளது சீனா. இது மட்டுமல்லாமல், 25 அமெரிக்க ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளது.
இரு நாடுகளின் இந்த நடவடிக்கைகளால் வர்த்தகப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ட்ரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து அந்நாட்டு பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அங்கு மட்டுமல்லாமல், அதன் தாக்கம் ஜப்பான், ஹாங்காங் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளன. இது மட்டுமல்லாமல், வரி விதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளில், விலைவாசி உயர்வுக்கும் இது வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிச்சயம் அப்செட்டாகியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் தற்போது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.