ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் இன்று பிற்பகல் 2.17 மணியளவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் உள்ள போண்டி என்ற இடத்தில், புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. அங்கு, விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த கடற்கரையில் மக்கள் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போண்டி கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம் அருகே நடந்த யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்ச்சியை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் கண்டனம்
ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே எனது எண்ணம் உள்ளது. அங்குள்ள காவல் அதிகாரிகளுடன் பேசி, சூழல் குறித்த தகவல்களை பெற்று வருகிறேன்.“ என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
இதனிடையே, அந்த கடற்கரையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், பொதுமக்களில் ஒருவர், தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவனை நேக்காக சென்று மடக்கிப் பிடித்து, அவனது துப்பாக்கியை பிடுங்கி, அவனையே சுட முயற்சிப்பது பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரமர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.