ஆப்பிள் நிறுவனத்தின் கிரெடிட் கார்ட் விநியோகத்திற்கான விண்ணப்பம் தொடக்கத்தில்  நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆப்பிள் நிறுவனம்:


உலகளவில் தரமான தொழில்நுட்ப சாதனங்கள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது ஆப்பிள் நிறுவனம் தான். அந்நிறுவனத்தின் சாதனங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு, உயர்தொழில்நுட்பம்  மற்றும் உடல்நலன் தொடர்பான கூடுதல் அம்சங்கள் ஆகியவை, பயனாளர்கள் ஆப்பிள் சாதனங்களை அதிகம் விரும்பி வாங்க முக்கிய காரணமாக உள்ளது. தொழில்நுட்ப சாதனங்களுடன் நிற்காத ஆப்பிள் நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு ஆப்பிள் கிரெடிட் கார்ட் சேவையை தொடங்கியது. ஆனால், இந்த சேவையை தொடங்குவதற்காக டிம் குக் சார்பில் வழங்கப்பட்ட விண்ணப்பம், முதலில் நிராகரிக்கப்பட்டது. ஆம், சரியாக தான் படிக்கிறீர்கள், உலக தொழில்நுட்ப சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான டிம் குக்கின் விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது. 


காரணம் என்ன?


சமூகத்தில் பிரபலமான நபர்களின் விவரங்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்புள்ளதால், அத்தகைய நபர்களின் விண்ணப்பங்களை கிரெடிட்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்கின்றன. பிரபலமானவர்கள் உடன் சேர்ந்து பணியாற்ற கிரெடிட்ஸ் நிறுவனங்கள் சம்மேளனம் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.


இந்நிலையில் தான், தொழில்நுட்ப சாம்ராஜ்ஜியமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும்,  2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் கொண்டவரான பில் கேட்ஸ்,  ஆப்பிள் நிறுவனம் சார்பில் கிரெடிட் கார்ட்ஸ் சேவையை தொடங்க விண்ணப்பித்தபோது அது நிராகரிக்கப்பட்டுள்ளது.


கோல்ட்மேன் சாக்ஸ் உடன் ஒப்பந்தம்:


இருப்பினும் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், ஆப்பிள் உடன் சேர்ந்து கிரெடிட் கார்ட் சேவை தொடங்க ஒப்பந்தம் செய்தது. அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது கிரெடிட் கார்ட் சேவையை தொடங்கியது.


கோல்ட்மேன் சாக்ஸ் உடன் பிரச்னை:


ஆனால், கடந்த 2019 இல் ஆப்பிள் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஆப்பிள் இடையேயான உறவில் சில சிக்கல்கள் உள்ளன. இதுதொடர்பான அறிக்கைகளின்படி, ஆப்பிள் கார்டின் லாபம் குறுகிய காலத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளதால், கோல்ட்மேன் சாச்ஸ் உடனான கூட்டணியை  நிறுத்துவது குறித்து ஆப்பிள் நிறுவனம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


பிரச்னைக்கான காரணம் என்ன?


ஆப்பிள் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, ​​பொருளாதார நிலைமைகள் சாதகமாக இருந்தன, வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தன. இதன் காரணமாக ஆப்பிள் கார்டை ஏற்றுக்கொள்வதற்கு வணிகர்கள் செலுத்தும் பரிமாற்றக் கட்டணம் போன்ற சில கிரெடிட் கார்டு கட்டணங்களை வசூலிக்க வேண்டாம் என்று கோல்ட்மேன் ஒப்புக்கொண்டார். இந்த முடிவு அவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,  கூட்டாண்மையுடன் தொடர்புடைய உயரும் செலவுகளைக் கையாள்வது கோல்ட்மேனுக்கு சவாலாக மாறியுள்ளது. கார்டின் வடிவமைப்பிலும் இரு நிறுவனங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஆப்பிள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.