பல்வேறு ஈரானிய அரசின் இணையதளங்கள் மற்றும் அதன் கீழ் வரும் ஊடக இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement


 






அடையாளம் தெரியாத ஹேக்கர்களின் ட்விட்டர் கணக்குகள் குறிப்பிட்ட அரசின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்ததையடுத்து, இணையதளங்கள் முடங்கியுள்ளது.


குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற பெண் கடந்த செவ்வாய்கிழமை (13-ம் தேதி) தனது குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை காவல்துறை பிரிவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.


அந்த நேரத்தில், நெறிமுறை காவல்துறை பிரிவு மாஷா அமினியின் குடும்பத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டுள்ளது. அப்போது அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி அவரை கைது செய்து காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.


காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் மாஷா உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த பெண்கள் மாஷாவின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர். இது அங்கு மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், போராட்டத்திற்கு ஆதரவாக இணையதளங்கள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


அமினியை தவறாக நடத்தினார், அடித்தார்கள் என்ற குற்றச்சாட்டுகளை ஈரானிய அலுவலர்கள் மறுத்துள்ளனர். மேலும், ஏற்கனவே இருந்த அவரின் உடல் நிலைமையின் காரணமாக அவரது மரணத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரது குடும்பத்தினர் இந்த கருத்துகளை நிராகரித்துள்ளனர்.


புதன்கிழமை அதிகாலை வெளியான ஒரு வீடியோவில், அமினியின் மரணத்திற்குப் பிறகு வெடித்த போராட்டங்களை காணலாம். ஈரானிய அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வலைத்தளங்கள் தாக்குதலின் முக்கிய இலக்காகத் தெரிகிறது. ஒன்று அரசாங்கத்தின் "ஸ்மார்ட் சர்வீசஸ்" இணையதளம், இதில் ஏராளமான ஆன்லைன் சேவைகள் வழங்கப்படுகின்றன. மற்றொன்று அரசாங்க செய்திகள் மற்றும் அதிகாரிகளுடன் நேர்காணல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டது.


ஈரானிய அரசு தொலைக்காட்சியின் வலைப்பக்கம் உட்பட பல இணையதளங்களும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி சிறிது நேரம் முடக்கப்பட்டன.