அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில், ஆறு மாத குழந்தை, 17 வயது தாய் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து, இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


விசாலியா நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோஷன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து அதிகாலை துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அதிகாலை 3:30 மணி அளவில் அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு குறித்து எதிர்வினை ஆற்றியுள்ளனர்.


இதுகுறித்து ஷெரீப் (மக்கள் பிரிதிநிதி) மைக் பவுட்ரோஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுடப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கையை கொண்டு பார்த்தால் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தொடர் துப்பாக்கிச்சூடு நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.


இரண்டு சடலங்கள் தெருவில் கண்டெடுக்கப்பட்டது. மூன்றாவது நபர் வீட்டின் நுழைவாயிலில் சுட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மூவர் வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டனர்.


அதில், ஒருவர் இன்னும் உயிருடன் இருந்தார். ஆனால், பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். குறைந்தது இரண்டு சந்தேக நபர்களை விசாரணை அதிகாரிகள் தேடி வருகின்றனர். கொலைக்கும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது" என்றார்.


சமீபத்தில்தான், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். 


அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.


அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.


கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.


அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.