கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறிய நிலையில், மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல இந்தியா திட்டமிட்டதாகவும் இதை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை முயற்சிக்கு பின்னணியில் இந்தியா அதிகாரியா?


இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியா அதிகாரி ஒருவர்தான் இந்த சதி திட்டத்தை தீட்டியதாக கூறப்படுகிறது.


அமெரிக்காவில் ஆயுதங்களையும் போதை பொருள்களையும் சட்ட விரோதமாக விற்று வரும் நிக்கில் குப்தா என்பவர் மூலம், கூலிப்படையை சேர்ந்த ஒருவருக்கு பணம் கொடுத்து பன்னூனை கொலை முயற்சி நடந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இந்த சதி திட்டத்தில் ஈடுபட்ட இந்தியா உளவுத்துறையை சேர்ந்த அதிகாரியின் பெயரை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை.


இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு உலக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது.


"இந்திய, அமெரிக்க உறவில் தாக்கத்தை ஏற்படுத்தாது"


இந்த நிலையில், அமெரிக்கா இதுதொடர்பாக பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் வியூக தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி பேசுகையில், "இந்த வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்து கொள்கிறோம். இதுகுறித்து விசாரிக்க இந்தியா தனிப்பட்ட முயற்சிகளை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 


சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு காரணமானவர்கள், தாங்கள் செய்த செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இந்திய - அமெரிக்க உறவில் இந்த விவகாரம் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க பயணத்துக்கு பிறகுதான், இந்த சதி திட்டம் குறித்து தெரிய வந்தது.


நீதிமன்றத்தில் இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. எனவே, நீதித்துறையை தாண்டி கருத்து கூறக்கூடாது. கவனமாக இருக்க விரும்புகிறேன். இரண்டு விஷயம் பற்றி மட்டும் கூற விரும்புகிறேன். அமெரிக்காவின் வியூக ரீதியான கூட்டு நாடாக இந்தியா தொடர்கிறது.


இந்தியாவுடனான வியூக ரீதியான உறவை மேம்படுத்த, பலப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவோம். ஆனால், அதே சமயத்தில் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொள்கிறோம்" என்றார்.


இந்த சதி திட்டத்தில் இந்திய அரசு ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது. அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக சதி திட்டத்தை தீட்டியவர்களே அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லையா அல்லது அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) அவர்களின் திட்டத்தை முறியடித்தார்களா? என்பது குறித்து தெரியவில்லை என தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.