Amazon Layoff : சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.


உலக நாடுகளில் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. 


சமீபத்தில், 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்தது. பணி நீக்கத்தை பொறுத்தவரையில், அமேசான் நிறுவனமும் பல்வேறு கட்டமாக மேற்கொண்டு வருகிறது. 


மேலும் 9,000 பேர் 


அதன்படி, நேற்று 9,000  பணியாளர்களை அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. குறிப்பாக அதிக லாபம் தரும் பிரிவான  Amazon Web Services அல்லது AWS, Amazon People experience மற்றும் Technology, விளம்பரம் மற்றும் வீடியோ கேமர்களுக்கான லைவ் ஸ்ட்ரீமிங் தளமான Twitch ஆகிய துறைகளில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது அமேசான்.


இதில் அமெரிக்கா, கனடா மற்றும் கோஸ்டாரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள ஊழியர்களுக்கு பணிநீக்க அறிவிப்பை அமேசான் நேற்று அனுப்பியுள்ளது. சர்வதேச அளவில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அமேசான் நிறுவனம் முன்னெடுக்கும் இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கை இதுவாகும்.


”நிச்சயமற்ற பொருளாதாரம்" மற்றும் "விரைவான பணியமர்த்தல்" ஆகிய காரணங்களால், செலவினங்களை குறைக்கும் நோக்கில் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக,  கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களை அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது மேலும் 9 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பணிநீக்கங்கள்


இதேபோன்று அமெரிக்காவின் பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி மேலும் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது.  ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த மாதம் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.


விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இரண்டாம் சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா சில தினங்களுக்கு முன்பாக இரண்டாம் சுற்று  ஆட்குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, விரைவில் உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 10,000  பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனமானது ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில், 11 ஆயிரம் ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


65 லட்சம் பதிவுகள் நீக்கம்... தவறான தகவல்களுக்கு எதிராக ட்விட்டர் அதிரடி நடவடிக்கை..!