கடந்த ஒரு வார காலமாக, சீன உளவு பலூன் விவகாரம் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன உளவு பலூன் என சொல்லப்பட்டு வந்த ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதில் இருந்தே அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது.


பறக்கும் மர்மபொருள்:


சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆறே நாள்களில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வானில் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அடையாளம் தெரியாத அந்த மர்ம பொருளையும் அமெரிக்க ஜெட் விமானங்கள் நேற்று முன் தினம் சுட்டு வீழ்த்தியது.


இதை தொடர்ந்து, கனடா வான்பரப்பில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, சீன வான்பரப்பில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் காணப்பட்டது.


ஏலியன்களுக்கு தொடர்பா?


வடக்கு அமெரிக்காவின் வான்வெளி பரப்பில் கடந்த 2 வாரங்களில் மூன்று முறை அத்துமீறல்கள் நடைபெற்று உள்ளன. இதனால் அந்த பிராந்தியத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் பறந்த இந்த பொருட்கள் விமானத்தை ஓட்டி இல்லை என்றாலும் அந்த பொருட்கள் எப்படி பறந்தன? அவை எந்த நாட்டிற்கு சொந்தமானது? ஏலியன் விமானமா? எதற்காக பறந்தது? மக்களுக்கு இது ஆபத்து விளைவிக்குமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில், இந்த விவகாரத்திற்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு இருப்பதாக எழுப்பப்படும் சந்தேகங்களை ஒட்டு மொத்தமாக மறுத்துவிட முடியாது என அமெரிக்க விமானப்படை ஜெனரல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய ஜெனரல் க்ளென் வான்ஹெர்க், "இது தொடர்பான விசாரணையை புலனாய்வு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளிடம் விட்டுவிடுகிறேன். நான் எதையும் மறுத்துவிடவில்லை. இந்த கட்டத்தில், வட அமெரிக்காவை நெருங்கும் அனைத்து அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து ஆய்வு செய்வோம். அது என்ன பிரச்னை என்பதை கண்டறிய முயற்சி மேற்கொள்வோம்" என்றார்.


கனடா, அமெரிக்கா கூட்டு முயற்சி:


அமெரிக்கா சுட்டு வீழ்த்திய மர்ம பொருள்கள் ஏலியன்களுடையது என்ற கருத்தை மறுக்கிறீர்களா என கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஜெனரல் க்ளென்தான், வட அமெரிக்க வான்பரப்பை கண்காணித்து வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் உத்தரவின் பேரில் அமெரிக்க போர் விமானம் ஒன்று, அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது.


இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ”கனடா வான்வெளியில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத ஒரு பொருளை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன். கனடா  மற்றும் அமெரிக்க விமானங்கள் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டன.


அப்போது, அமெரிக்காவின் F-22 விமானம் அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் உடன் தொலைபேசி மூலமாக பேசினேன். சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மப் பொருளின் பாகங்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்யும் பணிகளை, கனடா மேற்கொள்ளும். வட அமெரிக்கா பிராந்தியத்தை கண்காணிப்பதற்காக அமெரிக்க படைகளுக்கு நன்றி” என்றார்.