ஈரானில், படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூன்று மகன்கள், டெஹ்ரானில் நடைபெற்ற அவரது பொது இறுதிச் சடங்கு விழாவில் கலந்துகொண்டபோது, கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லாவில், முஸ்தபா, மெய்சாம் மற்றும் மசூத் கமேனி ஆகியோர், அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கானோருடன்  இணைந்தனர். இருப்பினும், கமேனியின் மகனும், அவருக்குப் பின் வருபவர் என்று கூறப்படுபவருமான மொஜ்தபா கமேனி வரவில்லை. இந்த முக்கியத்துவம் வாய்ந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் போது அவர் வராதது கவனத்தை ஈர்த்துள்ளது.

Continues below advertisement

உடைந்து அழுத மகன்கள்

டெஹ்ரானின் இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா மத வளாகத்தின் பரந்த முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளுக்குப் பின்னால், முஸ்தபா, மெய்சாம் மற்றும் மசூத் கமேனி ஆகியோர் பிரார்த்தனை செய்வதை ஈரானிய அரசு தொலைக்காட்சி காட்டியது. அப்போது, 3 பேரும் துக்கம் தாளாமல் உடைந்து கண்ணீர் விட்டு அழுதனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரின் முதல் நாளில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட அலி கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்காக அனுசரிக்கப்பட்ட பொது துக்கத்தின் இரண்டாம் நாளில், இந்த உணர்ச்சிகரமான காட்சிகள் அரங்கேறின.

இஸ்லாமியக் குடியரசு, ஒரு வார கால மாபெரும் இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முக்கிய மதத் தலங்கள் முழுவதும் பெருந்திரளான மக்கள் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த நிகழ்வுகளை தேசிய ஒற்றுமை மற்றும் நினைவுகூர்தலின் தருணமாக சித்தரித்துள்ள நிலையில், ஆதரவாளர்கள் திரளாகத் கூடி, தங்கள் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

மூத்த ஈரானியத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளின் சவப்பெட்டிகள் ஒரு நாள் முழுவதும் உள்ளரங்கில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கமேனியின் சவப்பெட்டியானது, அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாத பேத்தி உள்ளிட்ட பல குடும்ப உறுப்பினர்களின் சவப்பெட்டிகளுடன் கண்ணாடியின் கீழ் வெளிப்புறத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

மொஜ்தபா வரவில்லை

பெரிய அளவிலான இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றபோதிலும், மொஜ்தபா கமெனி பொதுவெளியில் தோன்றியதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை. அவரது தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை கொன்ற அதே தாக்குதலில், அவரும் காயமடைந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்ற ஆதரவாளர்கள் இடையே கோபம் காணப்பட்டது. துக்கம் அனுசரித்தவர்களில் சிலர், தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரினர்.

மத்திய டெஹ்ரானில் பெருந்திரளான மக்கள் தொடர்ந்து கூடினர். அவர்களில் பலர் அழுதுகொண்டும், தங்கள் மார்பில் அடித்துக்கொண்டும் காணப்பட்டனர். விழாக்களில் கலந்துகொள்வதற்காக மக்கள் பயணம் செய்ததால், மில்லியன் கணக்கான பயணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் மெட்ரோ ரயில்வே வலையமைப்பு தெரிவித்தது.