இலங்கையில் கடந்த 9 மாதங்களில் 429 பேர் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் பகிர்ந்துள்ளது. குறிப்பாக, 14 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் 3 பள்ளி மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொதுவாக, எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய் மூன்று வழிகளில் பரவுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து ரத்தம் ஏற்றி கொள்வதாலும், பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து புதிதாக பிறந்த குழந்தைக்கும், பாதுகாப்பற்ற பாலியல் உறவு வைத்து கொள்வதாலும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுகிறது என சுகாதார அலுவலர்கள் கூறுகின்றனர்.


ஒரு நபர் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, சரியான சிகிச்சையைப் பெறவில்லை என்றால், அது அவரது நோய் எதிர்ப்பு சக்தியை மிக மோசமாக பாதிக்கும். மேலும் 02-07 ஆண்டுகளுக்குள் எந்த அறிகுறிகளும் காணப்படாமல் வைரஸ் வளரும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.






2021 ஆம் ஆண்டில் இலங்கையில் பதிவான எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 410 ஆக இருந்தது. இதுகுறித்து பேசியுள்ள தேசிய STD/AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குனரும் மருத்துவருமான ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி, "18 முதல் 30 வயதானவர்கள், எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நோய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.


கடந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 148 பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதை ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்குள் எண்ணிக்கை இருமடங்காக 342 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த ஆண்டு, 18-25 வயதுக்கு இடைப்பட்ட 25 பேர் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதே வயதிற்குட்பட்ட 50க்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இளைஞர்கள் மத்தியில் கூட, ஆண்களிடையே அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 30 பேர், இதில் பல பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்குவர். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 14 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் பௌத்த பிக்குகள். பள்ளிகளில் சரியான பாலியல் கல்வி இல்லாதது மற்றும் நோய் பற்றிய புரிதல் இல்லாதது இந்த நிலைக்கு காரணம்" என்றார்.


பாதிக்கப்படுவதற்கு அதிக சாத்தியக்கூறு இருப்பவர்கள், எச்ஐவி பாசிட்டிவா என்பதை கண்டறிய உடனடியாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என தேசிய எய்ட்ஸ் மற்றும் STDகள் விழிப்புணர்வு இயக்கம் தெரிவித்துள்ளது.