Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஆப்கானிஸ்தானின் காபூலின் கிழக்கு பகுதியில்  4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.49 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 85 கி.மீ தொலையில் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி சாலையில் முகாமிட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் காபூலை சுற்றி இருக்கும் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 






மேலும், அப்பகுதியில் கட்டடங்கள் சரிந்தது மட்டுமின்றி, சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களும் நொறுங்கியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


முன்னதாக, 


கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் உலகில் பல பகுதிகளில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி குஜராத்தின் துவாரகா பகுதியில் காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவானது.


மார்ச் 5ஆம் தேதி அடுத்தடுத்து தொடர்ந்து ஜம்மு, ஆப்கான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் எல்லை நாடான ஆஃப்கானிஸ்தான் ஃபைசதாபாத்தில் காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்தது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அள்வுகோலில் 4.3 அளவாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் வடக்கு பகுதியில், காலை 6.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்தது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவாக பதிவானது. பிப்ரவரி 28ஆம் தேதி ஆப்கான், தஜிகிஸ்தான், இந்தியாவின் மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.


ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் தஜிகிஸ்தானின் முர்ஹொப் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. 


மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது. நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.


இவை அனைத்தும் துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தை ஒப்பிடும் போது லேசானது. ஆனாலும் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை உளுக்கிய நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.