ஈரானுக்கு எதிரான போரில் தேவையில்லாமல் அமெரிக்காவை இழுத்துவிட்டது இஸ்ரேல் தான், அதிலும் குறிப்பாக அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகுதான் என்ற குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் பரவலாக எழுந்தன. இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த மோதலில் தற்போது போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் அதை மீறி லெபனான் மீது தாக்குதல் நடத்தி, பிரச்னையை மீண்டும் தூண்டியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை மட்டும் தான் நிறுத்துவதாக இஸ்ரேல் கூறிய நிலையில், ஒப்பந்தத்தில் லெபனானும் அடங்கும் என்பதை, தற்போது ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி எடுத்துக் காட்டியுள்ளார். அவரது பதிவு குறித்து பார்க்கலாம்.

போருக்குள் அமெரிக்காவை இழுத்துவிட்ட இஸ்ரேல்

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போரை தொடங்கியது அமெரிக்கா. அதற்கு முன்னதாக, அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு ஈரானுக்கு பல மாதங்களாக அழுத்தம் கொடுத்து வந்தது அமெரிக்கா. அதற்காக 3 கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அந்த இடைப்பட்ட காலத்தில், சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ட்ரம்ப்பை நேரிலேயே சந்தித்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தூண்டினார்.

இதைத் தொடர்ந்து, ஓமனின் மத்தியஸ்தத்தில் நடந்த 3-வது பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் கிட்டத்தட்ட  அமெரிக்காவின் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டதாக ஓமன் அறிவித்தது. ஆனால், அதே நாள் இரவில், அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகள், ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதன்மூலம், நெதன்யாகுவின் தூண்டிலில் சிக்கினார் ட்ரம்ப்.

அந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானும் சரியான பதிலடி கொடுத்துவந்தது. இதனிடையே, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அமெரிக்காவிலும் இந்த பிரச்னை எதிரொலிக்கத் தொடங்கிய நிலையில், கோபமடைந்த ட்ரம்ப், ஈரானை முழுமையாக அழிக்கும் அளவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியதில், 2 வாரங்கள் போர்நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப். ஆனால், இஸ்ரேலுக்கு இதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. எனினும், ட்ரம்ப் அறிவித்ததால், ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்த மாட்டோம், லெபனான் மீது தாக்குதல் தொடரும் என அறிவித்தது.

அதேபோல், இன்று 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகளை வீசி லெபனான் மீது தாக்குதலும் நடத்தியது. இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியே இஸ்ரேல் இவ்வாறு செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதை, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நிரூபித்துள்ளார்.

அப்பாஸ் அரக்சியின் பதிவு கூறுவது என்ன.?

இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈரான்-அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை: அமெரிக்கா போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேல் வழியாக தொடரும் போர் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால் இரண்டையும் ஒரே நேரத்தில் கொண்டிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், லெபனானில் நடந்த படுகொலைகளை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பந்து இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது. அது தனது வாக்குறுதிகளின்படி செயல்படுமா என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்றும் அரக்சி தனது பதிவில் கூறியுள்ளார்.

இந்த பதிவில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீஃப்பின் பதிவு ஒன்றை அரக்சி மேற்கோள் காட்டியுள்ளார். அந்த பதிவில், இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் அடங்கும் என்பதை அவர் தெளிவாக கூறியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் போரை தொடங்க வைக்கும் நோக்கில், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது தெளிவாகிறது. இந்த முறையும் ட்ரம்ப் ஏமாறுவாரா அல்லது சுதாரித்துக் கொள்வாரா என்பதே தற்போது உலகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.