ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த புதனன்று 500க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அன்றிரவு நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி 2 விசைப்படகுகளையும் அதில் இருந்த 20 மீனவர்களையும் கைது செய்தனர்.




 அதே போல் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஒரு விசைப்படகை பறிமுதல் செய்து அதிலிருந்த 14 மீனவர்களை கைது செய்தனர். அதே போல் திருகோணமலை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டிணத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளுடன் அதில் இருந்த 20 மீனவர்கள் என, ஒரே நாளில் 54 தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை அத்துமீறியுள்ளது.




 இலங்கையில் கொரோன தொற்று அதிகரித்து வருவதால் கைதான 20 ராமேஸ்வரம் மீனவர்கள் இரணை தீவிலும், 14 காரைக்கால் மீனவர்கள் காரை நகரிலும், 20 நாகை மீனவர்கள் திரிகோணமலையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோன பரிசோதனை மற்றும் தனி முகாம் நிறைவு பெற்ற பின்பாக அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.