கென்ய நாட்டின் கடலோர பகுதியில் அமைந்துள்ளது கிலிஃபி கவுண்டி. இயேசு கிறிஸ்துவை சந்திப்பதற்காக இங்குள்ள சிலர் சாப்பிடாமல் விரதம் இருந்ததாக கூறப்படுகிறது. சாப்பிடாமலே பட்டினி கிடந்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட ஆறு பேர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மூளை செலவு செய்த பாதிரியார்:


மத போதகர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சிலர் இயேசு கிறிஸ்துவை சந்திப்பதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளனர். குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு மேற்கொண்டு வந்த நான்கு பேர், மாகரினி பகுதியில் உள்ள ஷகாஹோலா கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் விரதம் இருந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "இயேசுவைச் சந்திக்க உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று உள்ளூர் போதகர் ஒருவர் கூறியுள்ளார். பின்னர், அவர்கள் வனத்திற்கு சென்று விரதம் இருந்துள்ளனர்.  பிரார்த்தனை நடைபெறுவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் வனப்பகுதிக்கு சென்றனர். உண்ணாவிரதத்தில் 15 பேர் பங்கேற்பதை கண்டோம். ஆனால், 11 பேர் மட்டுமே உயிருடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்சின் தலைவரான மாக்கன்சி என்தெங்கே என்பவரால் இந்த குழு மூளைச்சலவை செய்யப்பட்டது.


உலகம் அழிவதை தவிர்க்க விரதம்:


உலகம் அழிவதை தவிர்க்க உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என மத போதகர் சொன்னதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும், விரைவாக பரலோகத்திற்கு சென்று இயேசுவைச் சந்திக்க தங்களைப் உண்ணாவிரதம் இருக்கும்படி அவர் அறிவுறுத்தினார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்சின் பாதிரியார் பால் மகென்சி என்தெங்கே என்ற நபரால் இவர்கள் மூளைச் சலவைக்கு உள்ளாகியுள்ளனர்.


காட்டில் மர்மம்:


அந்த காட்டுப்பகுதியில் மேலும் எந்த விசாரணையும் செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். ஏனென்றால், மத போதகரை பின்பற்றுபவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய விடாமல் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.


ஏற்கனவே, கடந்த மாதம் இரண்டு குழந்தைகளின் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட போதகர் தற்போது போலீஸ் ஜாமீனில் வெளியே இருக்கிறார். அவரது பெற்றோர்கள் அவரைப் பின்பற்றி வந்துள்ளனர். பெற்றோரை 'ஹீரோ' ஆக்குவதாகக் கூறி, இரண்டு குழந்தைகளையும் அந்த கல்லறையில் புதைக்க வைத்துள்ளார் போதகர் என்தெங்கே. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் பிரதான மதம் கிறிஸ்தவம். 2019ஆம் ஆண்டு வெளியான தகவலின்படி, சுமார் 85.5% கென்ய மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.