உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் காதலனுடன் சேர்ந்து சினிமா பாணியில்,  இளம்பெண் செய்த கொலை ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரஜ்பூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 28 வயதான ஹேமா சவுத்ரி, நொய்டாவில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் கடந்த 12ம் தேதி பணிக்கு சென்ற அவர், மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின்படி, ஹேமா சவுத்ரியை கடைசியாக பார்த்தது 27 வயதான அஜய் தாக்கூர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த அஜய் தாக்கூரையும் அவரது காதலி பயல் பாஹ்தி என்பவரையும் கைது செய்தனர்.


அதிர்ந்த காவல்துறை:  


கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரானையின்போது, அவர்கள் கூறிய தொடர் கொலைகளுக்கான திட்டம் குறித்தான உண்மைகள் காவல்துறையயே அதிர்ச்சியடைய செய்துள்ளது.


பயலின் பழிவாங்கும் திட்டம்:


அஜய் தாக்கூரின் காதலியான  22 வயதான பயல் பாஹ்தியின் பெற்றோர், தங்களது உறவினரிடமிருந்து ரூ.5 லட்சத்தை கடனாக பெற்றுள்ளனர். அதை திருப்பி தரமுடியாத சூழலில் கடன் கொடுத்தவர் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதோடு, பயலின் சகோதரர்களும், தங்களது பெற்றோரை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த பயலின் பெற்றோர் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டனர்.






ஹேமாவை கொலை செய்ய திட்டம்:


இதனால் கடும் கோபத்திற்கு ஆளான பயல், தனது பெற்றோரின் மரணத்திற்கு காரணமான நபர்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். தனது திட்டம் குறித்து காதலன் அஜய் தாக்கூரிடமும் விளக்கியுள்ளார். அதேநேரம், தான் இந்த கொலை பழிகளில் சிக்கி சிறைக்கு சென்று விடக்கூடாது எனும் வகையில் திட்டமிட்டு கொண்டிருந்தபோது தான், நொய்டாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஹேமா சவுத்ரியை, பயலும் அவரது காதலனும் கண்டுள்ளனர். ஹேமா தன்னை போன்றே உருவ அமைப்பு கொண்டுள்ளதால், அவரை கொலை செய்து உயிரிழந்தது தான் தான் என சமூகத்தை நம்ப வைத்து விட்டு,  பின்பு தனது பழிவாங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என, அஜய் தாக்கூரிடம் பயல் தெரிவித்துள்ளார்.


கொடூரமாக கொல்லப்பட்ட ஹேமா:


இதையடுத்து, ஹேமாவிடம் பழக தொடங்கிய அஜய் தாக்கூர், கடந்த மாதம் 12ம் தேதி அவரை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு பயலின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஹேமாவின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, அவருக்கு தனது உடைகளை பயல் அணிவித்துள்ளார். தொடர்ந்து, கொதிக்கும் எண்ணெயை ஹேமாவின் முகத்தில் ஊற்றியுள்ளார். மறுநாள் காலை பயலின் வீட்டிற்கு வந்து பார்த்த உறவினர்கள், அங்கு முகம் சிதைந்து கிடைந்த  உடலின் அருகே கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். பயல் தனது கைப்பட எழுதியிருந்த அந்த கடிதத்தில், சூடான கொதிக்கும் சமையல் எண்ணெய் முகத்தில் பட்டதால் தனது அழகு பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த உலகம் தன்னை ஏற்றுக்கொள்ளாததாலும் தற்கொலை செய்துகொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, அங்கிருந்த உடல் பயலுடையது தான் என நம்பி, அவரது உறவினர்கள் இறுதி மரியாதை செய்து முடித்துள்ளனர்.


இதனிடையே, வீட்டை விட்டு வெளியேறிய பயல் மற்றும் அஜய் தாக்கூர், ஆர்ய சமாஜ் பகுதியில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். மேலும், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் கிரைம் டாகுமெண்ட்ரி ஆகியவற்றை பார்த்தே,  பயல் இந்த திட்டத்தை தீட்டியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.