மணமகள் திருமணத்தின் போது கணவனையும், அவரது தந்தையையும் சேர்த்து திருமணம் செய்த விநோத சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது. 


திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை என்று 90’ஸ் கிட்ஸ் கவலைப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், சிலர் இன்று வரை திருமணத்திற்கு பெண்களை தேடி கொண்டிருக்கின்றனர். 90’ஸ் கிட்ஸ்க்கு திருமணம் ஆகாததை பலரும் கிண்டலடித்து மீம்ஸ்களை வைரலாக்கி வருகின்றனர். ஒருசிலர் திருமணத்தின் நினைவுகள் என்றென்றும் நிலைத்து இருக்க ப்ரீ வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். தற்போது உள்ள ட்ரெண்டிங்கிற்கு ஏற்றவாறு மேரேஜ் வெட்டிங் ஷூட்களை கடலுக்குள்ளும், கடலுக்கு மேலும், விமானத்திலும் செய்து ட்ரெண்டாகி வருகின்றனர். 


இதையெல்லாம் தாண்டி திருமணத்தின் போது நடக்கும் சில சுவாரசிய சொதப்பல் சம்பவங்கள் எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆஸ்திரேலியா பெண் ஒருவருக்கு தனது திருமண நாளை எப்பொழுதும் மறக்க முடியாத அளவுக்கு இருந்துள்ளதாக கூறியுள்ளார். ஆஸ்திரேலியா ரேடியோ சேனல் ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ”நீங்கள் மறக்க முடியாத சொதப்பல் சம்பவம் எது” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய கிம் என்ற பெண், தனது திருமண கதையை பகிர்ந்து கொண்டார். திருமண நாளில் தனது கணவரையும், அவரது தந்தையும் சேர்த்து ஒன்றாக திருமணம் செய்து கொண்டதாக கூறி அந்த பெண் அதிர்ச்சி அளித்தார். 


”திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய திருமண சான்றிதழில் மணமகனும், மணமகளும் கைழுத்திட வேண்டும். முன்னதாக திருமணத்திற்கு சாட்சியாக வந்த எனது கணவரின் தந்தை திருமண சான்றிதழில், மணமகன் பெயர் இருக்கும் இடத்தில் கையெழுத்திட்டார். அதை பார்த்து நான் அதிர்ந்தேன். பின்னர், அவரது கையெழுத்துக்கு அருகில் என் கணவர் மணமகனாக கையெழுத்திட்டார். எனது மாமானார் செய்த தவறால், சட்டப்படி இருவரையும் நான் திருமணம் செய்ததாக ஆனது. இதனால் எனது ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்தது. அது வெறும் திருமண சான்றிதழ் என்பதால், என்னை சமாதானம் செய்து கொண்டேன்” எனக் கூறினார். கிம் சொன்ன அவரது திருமண கதையை கேட்ட அனைவருக்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.