தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் களைகட்டிய வார சந்தை. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம், வேப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்திற்காக ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆடு, கொடி ஆடுகளை வார சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

 



 

இந்த ஆடுகளை வாங்குவதற்காக கடலூர் மட்டும் இன்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் அரியலூர் பெரம்பலூர் நாமக்கல் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர். சந்தையில் ஒரு ஆட்டின் விலை 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை ஆகியது அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை 4 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை ஆனது, இந்த விற்பனையில் நேற்று மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் அளவு வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் இதற்கு முந்தைய வாரங்களில் இந்த அளவிற்கு வியாபாரம் நடைபெறவில்லை ஆனால் இந்த வார சந்தையில் தீபாவளி நெருங்கும் காலம் என்பதால் வியாபாரம் மிக சிறப்பாக நடந்ததாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகழ்ச்சி தெரிவித்தனர்.

 

மேலும் வார சந்தைக்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருபவர்களிடம் இது நாள் வரை ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் ஒரு ஆட்டிற்கு தலா 30 ரூபாயை வசூல் செய்து கொண்டிருந்தனர். ஆனால் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் ஒரு ஆட்டிற்கு தல 60 ரூபாய் என வசூல் செய்ததாகவும், மேலும் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட ரசீதில் ஆடுகளின் எண்ணிக்கையை மட்டும் எழுதப்படுவதாகவும் வசூலிக்கப்படும் தொகையை எழுதாமல் ஊராட்சி மன்ற நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் வாரச் சந்தை நடைபெறும் இடத்தில் குடிநீர் கழிவறை போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாததால் மிகவும் சிரமமாக உள்ளதாகவும், மேலும் சந்தைக்கு ஆடு கொண்டு வருபவர்களுக்கு முறையான ரசீது வழங்கப்படாமல் பணம் மட்டும் பெற்று கொள்ளப்படுகிறது ஆதலால் இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.