கடலூரில் மீனவர் வளையில் சிக்கிய 25 கிலோ எடையுள்ள திருக்கை மீன் அபூர்வ வகையை சார்ந்தது என மீனவர்கள் தெரிவித்தனர்.
 
கடலூர் துறைமுகத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று வருகின்றனர். 
 
இந்நிலையில் கடலூர் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற வினோத் என்பவரின் விசைப்படகு நேற்று கரை திரும்பியது. அப்போது வலையில் இருந்த மீன்களை பார்த்தபோது, அதில் மிகவும் அபூர்வகையான வெள்ளை திருக்கை மீன் ஒன்று இருந்தது. இந்த மீன் சுமார் 25 கிலோ எடை இருந்தது. 
 
இது குறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில், திருக்கை மீன்களில் புள்ளி திருக்கை, செந்திருக்கை, கொம்பன் திருக்கை,ஆடா திருக்கை உள்ளிட்ட 4 வகைகள் உள்ளன. இதுவரை 4 வகை திருக்கை மீன்களை மட்டுமே நாங்கள் பார்த்திருப்பதாகவும், வெள்ளை நிற திருக்கை மீனை தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக பார்ப்பதாகவும் கூறினர்.
 
மீனவர் வலையில் சிக்கிய இந்த திருக்கை மீன் புள்ளி திருக்கை வகையை சேர்ந்தது போல இருந்தாலும் இது ஒரு அபூர்வ வகை மீன் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். கடலூர் துறைமுகம் வந்த இந்த மீனை ஏராளமான மீனவர்களும் பொதுமக்களும் ஆச்சரியமாக  பார்த்து சென்றனர்.