விழுப்புரம்: தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது புத்தர் போன்று வேஷம் போட்டதாகவும் ஆனால் இரண்டு ஆண்டுகளில் அம்மா உணவகங்கள் அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை திமுக அரசால் மூடுவிழா செய்யப்பட்டு வருவதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.



விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம், தமிழகம் முழுவதும்  கல்குவாரிகள், கிருஷர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இரண்டு நாட்களாக முடங்கி உள்ளதால் தமிழக அரசின் வளர்ச்சிக்கு பங்களிக்கிற இத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் இயங்குகின்ற 270 கல்குவாரிகள் இயங்காததால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளதாகவும் தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிற கனிவளங்களை தடுத்த நிறுத்த கோரி தமிழக அரசுக்கு பல முறை அதிமுக சார்பில் வலியுறுத்தியும்  நாள்தோறும் 15 ஆயிரம் லாரிகள் மூலமாக கனிமவளங்கள் அண்டை மாநிலங்களுக்கு  கடத்தபடுவதாக குற்றஞ்சாட்டினார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற  இரண்டு ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்க ஆர்வம் காட்டாமல் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக கூறினார். 


கல்குவாரி சட்டவிரோதமாக இயங்குவதாக கூறி யாருடைய ஆதாயத்திற்காகவோ இதில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தமிழகத்தில் உள்ள கனிம வள இயக்குனர் நிர்மல் ராஜ் சில கல்குவாரிகளுக்கு வேண்டுமென்றே ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், உண்மை நிலை அறிந்து கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார். 


தமிழக முதலமைச்சர் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார். ஆனால், சிறு குறு தொழில் செய்பவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்பதாகவும், பெரு நிறுவனங்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்  தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தக்காளி, கேரட்  விலை கிலோ நூறு ரூபாய்க்கு உயர்ந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் 1761 ஜல்லி குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் 1353 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


தமிழகத்தில் அதிகாரியின் தவறான போக்கால் கல்குவாரிகள் மூடபட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட சிறிய தொழில் செய்பவர்கள் மீது மட்டுமே திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கல்குவாரி வைத்துள்ள திமுகவினர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். தவறான அதிகாரியின் பேராசையால் கல்குவாரி கிரஷர் தொழில் தமிழகத்தில் பாதிக்கபட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கவனம் செலுத்தி இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதில் முதலமைச்சர் மருமகன் சபரீசனுக்கு ஒரு பங்கு தரவேண்டும் என்பதால் கல்குவாரிகள் மூடப்படுவதாக சிவி சண்முகம் கூறியுள்ளார்.


தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது புத்தர் போன்று வேஷம் போட்டதாகவும் ஆனால் இரண்டு ஆண்டுகளில் அம்மா உணவகங்கள் அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை திமுக அரசால் மூடுவிழா செய்து வருவதாகவும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு முதல்வர் அவ்வாறாக செயல்படவில்லை என தெரிவித்துள்ளார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.