விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி ஊழியர்களின் சேமநல நிதியில் ரூ.8 கோடியை கையாடல் செய்த அ.தி.மு.க. பாசறை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடமிருந்து 3 சொகுசு கார்கள், சரக்கு வாகனம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


சேமநல நிதி


விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான சேமநல நிதியில் கையாடல் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் நகராட்சிகளின் வேலூர் மண்டல நிர்வாக இயக்குனர் லட்சுமி தலைமையில் தணிக்கைத்துறை அலுவலர்கள், கடந்த 2 நாட்களாக விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு முக்கிய கோப்புகள், ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.


ரூ.8 கோடி கையாடல்


விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை நகராட்சி ஊழியர்களின் பிற்கால குடும்ப சேமநல நிதியில் ரூ.8 கோடியே 1 லட்சத்து 38 ஆயிரத்து 245-ஐ கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.


மேலும் விசாரணையில், இந்த பணத்தை விழுப்புரம் வி.மருதூர் சந்தானகோபாலபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராஜமூர்த்தி மகனான அ.தி.மு.க. மாவட்ட பாசறை இணை செயலாளர் வினித் (வயது 24) என்பவர் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் விழுப்புரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.


அ.தி.மு.க. நிர்வாகியிடம் விசாரணை


அதன்பேரில் இந்த கையாடல் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் விசாரணைக்காக வினித், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பணத்தை கையாடல் செய்ததை வினித் ஒப்புக்கொண்டார்.


இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-


கையாடல் செய்தது எப்படி?


விழுப்புரம் நகராட்சியில் பணிபுரியும் பெருக்குனர் குமாரி என்பவரின் வளர்ப்பு மகன் வினித் ஆவார். வினித்தை சிறுவயதில் இருந்தே குமாரி வளர்த்து வந்துள்ளார். குமாரியின் மூலமாக வினித், நகராட்சி அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார். கணினியில் திறம்பட செயல்பட்ட அவர், நகராட்சி அதிகாரிகளின் நம்பிக்கையை பெற்றார்.


இதன் அடிப்படையில் வினித், நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சேமநல நிதி கணக்குகளில் இருந்து கடன் தொகை, பகுதி இறுதி தொகை மற்றும் ஓய்வு பெறுவோருக்கு சேமநல நிதியை வழங்க கருவூல பட்டியல் தயார் செய்வதும், சத்துணவு திட்டம் தொடர்பான செலவினங்கள், ஊதியப்பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்பித்தல் மற்றும் ஆணையரின் ஊதியப்பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்பித்தல் போன்ற பணிகளை செய்து வந்துள்ளார்.


இதன் மூலம் அவர், கருவூல கணக்கில் பராமரிக்கப்படும் பல்வேறு திட்ட கணக்குகள் தலைப்பிலிருந்து பல்வேறு பெயர்களில் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு எவ்வித செலுத்தும் சீட்டு மற்றும் பதிவேடுகளில் ஆணையரின் கையொப்பம் பெறப்படாமல் நகராட்சிக்கு தொடர்பு இல்லாத வங்கிகளின் கணக்குகளுக்கு முறைகேடாக பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். இவ்வாறாக அவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை, தான் நடத்தி வரும் ஐ.ஏ.எஸ். அகாடமி, நீட் பயிற்சி மையம் உள்ளிட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகள் மற்றும் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வங்கி கணக்குகளுக்கும் என ரூ.8 கோடியே 1 லட்சத்து 38 ஆயிரத்து 245-ஐ பரிமாற்றம் செய்து அந்த தொகையை எடுத்து கையாடல் செய்துள்ளார். இவருக்கு உடந்தையாக விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த வளர்மதி, விழுப்புரம் அருகே பனங்குப்பத்தை சேர்ந்த அஜித்குமார் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.


கைது


இதையடுத்து வினித், வளர்மதி, அஜித்குமார் ஆகிய 3 பேர் மீதும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினித்தை கைது செய்தனர். பின்னர் வினித், கையாடல் செய்த பணத்தின் மூலம் வாங்கிய 3 சொகுசு கார்கள், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றையும் மற்றும் நிலம், சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வினித்தை போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.