விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள வீ. சாத்தனூர் கிராமத்தில் இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக  வீடுகளில் மழை நீர் சூழ்ந்து குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதையடுத்து கிராம மக்கள் சாலையில் மரக்கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். 

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் லட்சத் தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால்  தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி,உள்ளிட்ட 11 கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யகூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இரவு முதல் தொடங்கி தொடர்ந்து பெய்து வரும் மழை பெய்து வருகிறது. இதனால்  விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கோலியனூர், வளவனூர், கானை, அரசூர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி உள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. மழையின் காரணமாக வீ. சாத்தனூர் கிராமத்தில் கனமழையினால் குடிசை வீடுகளை மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

 

மழையினால் வீ. சாத்தனூர் கிராமத்தில் அய்யனார் என்பவரின் வீட்டிற்குள் மழை நீர் புகுந்து குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் மழை பாதிப்பிற்கு தீர்வு கான கோரியும் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது பாதிப்பிற்குள்ளாவதாக கூறி சாலையில் மரக்கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரனமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதே போன்று கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் மழை நீருடன் கழிவு நீரும் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து துண்டிக்கபட்டு பேரிகார்டுகள் அமைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மழையின் போதும் இந்த ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் நிரந்தர தீர்வு காண வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தாமரைக்குளம் பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் முழங்கால் அளவான நீரில் சாலையை கடந்து செல்வதால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.