விழுப்புரம்: விழுப்புரம் ராஜன் நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் எதிர்பாராத விதமாக மின்சார கம்பியை பிடித்ததில் சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு சிறுவன் ஆபத்தான  நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். 

 

விழுப்புரம் நகர பகுதியான விராட்டிக்குப்பம் சாலையிலுள்ள ராஜன் நகரில் பரந்தாமன் என்பவர் புதிய வீடு ஒன்றினை கட்டி வருகிறார். இவர் புதிய வீடுகளை கட்டி விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பரந்தாமன் ராஜன் நகரில் கட்டி வரும் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் சிவக்குமார் என்பவரின் மகன் கிருத்விக் மற்றும் அவரது தங்கச்சி மகன் கிஷோர் ராகவ் புதிய வீட்டில் ஏரி விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது கிஷோரும் கிருத்விக் என்ற இரு சிறுவர்களும் அவ்வழியாக செல்லக்கூடிய மின்கம்பியை எதிர்பாராத விதமாக பிடித்துள்ளனர். இதில் மின்சாரம் தாக்கி கிஷோர் ராகவ் சம்பவ இடத்திலையே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

 

கிருத்விக் மின்சாரம் தாக்கி வீட்டின் மாடி பகுதியிலிருந்து கீழே விழுந்துள்ளார். வீட்டின் அருகே சத்தம் கேட்டவுடன் வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது கிருத்விக் மின்சாரம் தாக்கியதாகவும் கிஷோர் மேலே இருப்பதாக கூறியுள்ளான். இதனையடுத்து புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மேலே சென்று பார்த்தபோது கிஷோர் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். அதன் பின்னர் படுகாயங்ளுடன் மீட்கப்பட்ட சிறுவன்  கிருத்விக்கை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

உறவினர் வீட்டிற்கு சென்ற அருகிலுள்ள புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில்  விளையாடி கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரந்தாமன் என்பவர் கட்டி வரும் வீட்டில் ஏற்கனவே கொத்தனார், மேஸ்திரி இருவருக்கு மின்சார பாதிப்பு ஏற்பட்டதால வீட்டின் கட்டுமான பணியில் மின் ஒயர்கள் செல்லும் பகுதி வழியாக கட்டுமானம் அமையாத படி கட்டுமானத்தை மாற்றி அமைக்க ஆறு மாதங்களுக்கு முன்னரே நான்கு முறை மின்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதால் புதிய வீட்டின் கட்டுமான பணியை ஆறுமாதங்களாக பரந்தாமன் கிடப்பில் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.