விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மது போதையில் அண்ணனை பீர் பாட்டிலால் குத்திக் கொன்ற தம்பியின் வெறிச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியில் உள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் என்பவரது மகன் குமரேசன் (39). இவர் நேற்று இரவு  தனது தம்பி மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து நபர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது இவருக்கும் இவரது  தம்பி மணிகண்டனுக்கும் ஏற்பட்ட வாய் தகராறு பின்பு  கைகலப்பாக மாறியுள்ளது.


அண்ணனை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி


இந்த சம்பவத்தில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் குமரேசனை அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து ஓங்கி கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமரேசன் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் வலியால் துடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


போலீசார் விசாரணை


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோஷனை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.